சீர்காழி பகுதியில் எந்திரங்கள் பற்றாக்குறையால் அறுவடை பணி தேக்கம் விவசாயிகள் கவலை


சீர்காழி பகுதியில் எந்திரங்கள் பற்றாக்குறையால் அறுவடை பணி தேக்கம் விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 22 Jan 2019 10:45 PM GMT (Updated: 22 Jan 2019 6:48 PM GMT)

சீர்காழி பகுதியில் எந்திரங்கள் பற்றாக்குறையால் நெல் அறுவடை பணி தேக்கம் அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

திருவெண்காடு,

நாகை மாவட்டம், சீர்காழி தாலுகாவுக்கு உட்பட்ட திருவெண்காடு, கொள்ளிடம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், புதுப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பா நெற்பயிர்கள் நடவு செய்யப்பட்டது. இதில் ஆடுதுறை-38, பி.பி.டி. பொன்னி, ஆடுதுறை-46 மற்றும் 43 உள்ளிட்ட நெல் ரகங்களையும், பாரம்பரிய நெல் ரகங்களையும் சாகுபடி செய்துள்ளனர். மேற்கண்ட பகுதியில் இந்த ஆண்டு நெல் சாகுபடி அதிகளவில் செய்யப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இந்த நெற்பயிர்கள் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், அறுவடை செய்யும் பணியை மேற்கொள்ள தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அறுவடை எந்திரங்கள் மூலம் அறுவடை செய்ய விவசாயிகள் முன்வந்தாலும், அறுவடை எந்திரங்கள் பற்றாக்குறையாக உள்ளது. இதனால் பல இடங்களில் நெற்பயிர்களை அறுவடை செய்யும் பணி தேக்கம் அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மேலும், நெற்பயிர்கள் அறுவடை செய்யப்படாமல் வெயிலிலும், பனிபொழிவிலும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் சாய்ந்தும் கிடக்கின்றன. அறுவடை பணியில் ஈடுபட தொழிலாளர்கள் பற்றாக்குறையாக இருப்பதை தெரிந்து கொண்ட அறுவடை எந்திரங்களின் உரிமையாளர்கள் அதற்கான வாடகையை முன்பு இருந்ததைவிட கூடுதலாக கேட்பதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

எனவே, நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார், வேறு மாவட்டங்களில் இருந்து அறுவடை எந்திரங்களை குறைந்த வாடகைக்கு வரவழைத்து உடனே அறுவடை பணியை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story