ஓசூரில் கேரளா சென்ற லாரியில் திடீர் தீ விபத்து பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்


ஓசூரில் கேரளா சென்ற லாரியில் திடீர் தீ விபத்து பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 22 Jan 2019 11:00 PM GMT (Updated: 22 Jan 2019 7:03 PM GMT)

ஓசூரில், கேரளா நோக்கி சென்ற லாரியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.

ஓசூர்,

அரியானா மாநிலம் பானிபட் என்ற இடத்தில் இருந்து 12 டன் அளவிலான ரப்பர் பாரம் மற்றும் கம்பளி போர்வை உள்ளிட்ட வைகளை ஏற்றிக்கொண்டு, லாரி ஒன்று கேரளா நோக்கி சென்றது. இந்த லாரியை அரியானாவை சேர்ந்த டிரைவர் வாசீம் கான்(வயது22) என்பவர் ஓட்டிச்சென்றார். அவருக்கு உதவியாக மாற்று டிரைவர்கள் 2 பேர் லாரியில் இருந்தனர்.

நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஏ.எஸ்.டி.சி. பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே சாலையோரம் லாரி நிறுத்தப்பட்டு, டிரைவர்கள் 3 பேரும் லாரியின் உள்ளே தூங்கிக்கொண்டிருந்தனர். இந்த நிலையில், நேற்று அதிகாலை 4 மணியளவில், திடீரென லாரி தீப்பிடித்து மளமளவென எரிய தொடங்கியது. உடனே லாரியில் தூங்கிக்கொண்டிருந்த 3 பேரும் இறங்கி ஓடி உயிர் தப்பினர்.

மேலும் லாரியின் நாலாபுறமும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்ததால், லாரி உருக்குலைந்தது. லாரியில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகி நாசமானது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் வருவதற்குள் லாரி முற்றிலும் எரிந்து விட்டது. அதிகாலையில் நடந்த இச்சம்பவத்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அந்த வழியாக வந்த வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி அனுப்பப்பட்டன. இந்த சம்பவத்தின் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் ஓசூர் டவுன் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

இதேபோல், ஓசூர் அருகே காமன்தொட்டியை அடுத்த காவேரி நகர் பகுதியில், நேற்று முன்தினம் இரவு அந்த வழியாக வைக்கோல் பாரம் ஏற்றிச்சென்ற லாரியில் திடீர் தீ பிடித்தது. இதை கண்டு அக்கம்,பக்கத்தினர் உடனடியாக ஓடி வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதில் யாருக்கும் எந்தவித சேதமும் ஏற்படவில்லை.

Next Story