கல்குவாரி குட்டையில் மூழ்கி தாய்-மகள் பலி துணி துவைக்க சென்ற போது பரிதாபம்


கல்குவாரி குட்டையில் மூழ்கி தாய்-மகள் பலி துணி துவைக்க சென்ற போது பரிதாபம்
x
தினத்தந்தி 22 Jan 2019 11:15 PM GMT (Updated: 22 Jan 2019 9:10 PM GMT)

தேன்கனிக்கோட்டை அருகே துணி துவைக்க சென்ற போது கல் குவாரி குட்டையில் மூழ்கி தாய்-மகள் பரிதாபமாக இறந்தனர்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா கச்சுவாடியைச் சேர்ந்தவர் மரியப்பா. விவசாயி. இவருடைய மனைவி மாதேவி (வயது 33). இவர்களுக்கு லட்சுமி (13), மீனா (11) என்ற 2 மகள்களும், சந்தோஷ் (8) என்ற மகனும் இருந்தனர். இவர்கள் 3 பேரும் அந்த பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் முறையே 8, 5 மற்றும் 3-ம் வகுப்பு படித்து வந்தனர்.

இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள கல்குவாரியில் தண்ணீர் தேங்கி நிற்க கூடிய குட்டையில் துணி துவைப்பதற்காக மாதேவி தனது இளைய மகள் மீனாவை அழைத்து கொண்டு நேற்று காலை சென்றார்.

அங்கு துணி துவைத்துக்கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக சிறுமி மீனா குட்டையில் தவறி விழுந்தாள். இதை பார்த்த மாதேவி மகளை காப்பாற்ற குட்டையில் குதித்தார். இதில் 2 பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனிடையே குட்டையில் துணி துவைப்பதற்காக சென்ற மாதேவி, மீனா ஆகியோர் நீண்ட நேரமாகியும் வராததை கண்ட அவரது உறவினர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது குட்டையின் கரைப்பகுதியில் துணிகள் இருந்தன. ஆனால் அவர்கள் 2 பேரையும் காணவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து தேன் கனிக்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் குட்டையில் இறங்கி தாய்-மகளை தேடினர். அப்போது மாதேவி, அவரது மகள் மீனா ஆகிய 2 பேரும் கல்குவாரி குட்டையில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. இதையடுத்து தீயணைப்பு படையினர் 2 பேரின் உடல்களையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அவர்களின் உடல்களை கண்டு அங்கு திரண்டு இருந்த உறவினர்கள், கிராம மக்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை போலீசார் அங்கு சென்று மாதேவி, மீனா ஆகிய 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கல்குவாரி குட்டையில் மூழ்கி தாய்-மகள் பலியான சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.

Next Story