அலகுமலையில் விதிகளின்படி ஜல்லிக்கட்டு நடப்பதை குழுவினர் ஆய்வு செய்வார்கள் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தகவல்


அலகுமலையில் விதிகளின்படி ஜல்லிக்கட்டு நடப்பதை குழுவினர் ஆய்வு செய்வார்கள் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தகவல்
x
தினத்தந்தி 22 Jan 2019 10:45 PM GMT (Updated: 22 Jan 2019 9:14 PM GMT)

அலகுமலையில் விதிகளின்படி ஜல்லிக்கட்டு நடப்பதை குழுவினர் ஆய்வு செய்வார்கள் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வுக்கூட்டத்தில் கூறினார்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் அலகுமலையில் வருகிற பிப்ரவரி மாதம் 3–ந் தேதி ஜல்லிக்கட்டு நடக்கிறது. இதுதொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கி பேசியதாவது:–

ஜல்லிக்கட்டில் பங்கேற்க உள்ள காளைகள் மற்றும் வீரர்கள் குறித்த விவரங்களை அமைப்பாளர்கள், முன்னரே தெரிவித்து முன் அனுமதி பெற வேண்டும். பங்கேற்பாளர்கள் குறித்த விவரங்கள் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும். விழா குழுவினர் விழாவுக்கான ஏற்பாடுகளை விழா நடைபெறுவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக முடித்த பின்னர் மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்படும்.

விதிகளின் படி ஜல்லிக்கட்டு நடக்கிறதா? என்பதை உறுதி செய்ய வசதியாக மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்படும் வருவாய்த்துறை, கால்நடைத்துறை, காவல்துறை மற்றும் பொது சுகாதாரத்துறை அலுவலர்கள் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்வார்கள். குழுவினரின் ஆய்வுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு கால்நடை பராமரிப்புத்துறை டாக்டர்களால் பரிசோதனை செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும். காளைகளுக்கு ஊக்கமருந்தோ, எரிச்சல் அளிக்கக்கூடிய பொருட்களையோ கொடுக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்துவது விழா அமைப்பாளர்களின் முழு பொறுப்பாகும். காளைகள் நிறுத்தி வைக்கும் இடம் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி நிகழ்வுகளை முழுமையாக பதிவு செய்ய வேண்டும். காளைகளுக்கு மது கொடுத்திருந்தால் மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டால் அவை ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதியில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர், உள்ளாட்சி துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர், வருவாய்த்துறையினர், மருத்துவத்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறையினர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் அறிவுறுத்தினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி, மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி, திருப்பூர் சப்–கலெக்டர் ஷ்ரவன்குமார், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் ராஜேந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சாதனைக்குறள், ஜல்லிக்கட்டு நலச்சங்க நிர்வாகிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story