தர்மபுரி மாவட்டத்தில் ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பினர் காலவரையற்ற வேலைநிறுத்தம்


தர்மபுரி மாவட்டத்தில் ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பினர் காலவரையற்ற வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 22 Jan 2019 10:45 PM GMT (Updated: 22 Jan 2019 9:26 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள். இதனால் அரசு அலுவலகங்களில் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன.

தர்மபுரி,

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ–ஜியோ சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நேற்று முதல் தொடங்கியது. இதன் ஒருபகுதியாக தர்மபுரி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களில் கணிசமானோர் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் பெரும்பாலான அரசு அலுவலகங்கள் பணியாளர்களின்றி வெறிச்சோடின. பல அரசு அலுவலகங்கள் குறைந்த அளவிலான ஊழியர்களுடன் இயங்கின. வேலைநிறுத்த போராட்டத்தால் அரசு அலுவலகங்களில் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன.

இந்த வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பின் சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ரத்தினம், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் கவுரன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் ஆனந்தன், பழனி, இளங்கோ, காமராஜ், காவேரி, ராமச்சந்திரன், அரசு பணியாளர் சங்க மாவட்ட நிர்வாகி பாஸ்கரன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். இடைநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் உள்பட பல்வேறு துறைகளில் ஊழியர்களிடையே நிலவும் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலர்கள், பகுதிநேர நூலகர்கள், பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் அரசாணை எண் 56, 100,101 ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும்.

தமிழகத்தில் 3500 பள்ளிகளில் சத்துணவு மையங்களை மூடும் முடிவை அரசு கைவிட வேண்டும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 21 மாத ஊதிய நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும். அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி.,யு.கே.ஜி. வகுப்புகளுக்கு மத்திய அரசின் முடிவின்படி புதிய ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு மாறாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பணிமாற்றம் செய்யும் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊழியர்கள், ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இதேபோல் பென்னாகரத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சேகர், நிர்வாகிகள் முருகேசன், பழனி ஆகியோர் தலைமையிலும், பாலக்கோட்டில் பட்டுவளர்ச்சி துறை ஊழியர் சங்க மாநில தலைவர் சிவப்பிரகாசம், நிர்வாகிகள் துரைராஜ், தமிழ்மணி ஆகியோர் தலைமையிலும், நல்லம்பள்ளியில் ஆசிரியர் சங்க நிர்வாகி ராமச்சந்திரன், அரசு ஊழியர் சங்க நிர்வாகி காவேரி ஆகியோர் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரூரில் அரசு ஊழியர் சங்க வட்ட செயலாளர் அழகிரி, தலைமையிலும், பாப்பிரெட்டிப்பட்டியில் ஜாக்டோ–ஜியோ நிர்வாகிகள் ராஜராஜன், கிருஷ்ணமூர்த்தி, அண்ணாகுபேரன் ஆகியோர் தலைமையிலும், காரிமங்கலத்தில் ஜாக்டோ–ஜியோ நிர்வாகிகள் அருள்தாஸ், புஷ்பலதா, நாகராஜ், குமரேசன் ஆகியோர் தலைமையிலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story