டிரைவருடன் ஏற்பட்ட பழக்கத்தால் ரூ.40 லட்சம், 450 கிராம் தங்க நகைகளை இழந்த பெண் மோசடி செய்த அண்ணன்-தம்பிக்கு போலீஸ் வலைவீச்சு


டிரைவருடன் ஏற்பட்ட பழக்கத்தால் ரூ.40 லட்சம், 450 கிராம் தங்க நகைகளை இழந்த பெண் மோசடி செய்த அண்ணன்-தம்பிக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 22 Jan 2019 10:40 PM GMT (Updated: 22 Jan 2019 10:40 PM GMT)

சுற்றுலா சென்றபோது டிரைவருடன் ஏற்பட்ட பழக்கத்தால் ரூ.40 லட்சம், 450 கிராம் தங்க நகைகளை திருமணம் ஆன பெண் இழந்துள்ளார். அவரிடம் மோசடி செய்த அண்ணன்- தம்பியை போலீசார் தேடிவருகிறார்கள்.

பெங்களூரு,

பெங்களூரு ஹெண்ணூரில் வசித்து வருபவர் ரோஷினி (வயது 28, பெயர் மாற்றப்பட்டுள்ளது). திருமணம் ஆனவர். இவருக்கு கணவர், ஒரு குழந்தை உள்ளது. கணவர் வேலைக்கு செல்லவில்லை. ரோஷினியின் தந்தை ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். கடந்த 2017-ம் ஆண்டு விடுமுறையை கொண்டாட குடும்பத்துடன் ரோஷினி சிம்லாவுக்கு சென்றார். அங்குள்ள சுற்றுலா இடங்களை அவர்கள் சுற்றுலா வாகனத்தில் சுற்றிப்பார்த்தனர். அந்த வாகனத்தை கமல்தீப் என்பவர் ஓட்டினார்.

இந்த வேளையில் ரோஷினிக்கும், கமல்தீப்புக்கும் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் தங்களின் செல்போன் எண்களை பரிமாறி கொண்டனர். இதையடுத்து அவர்கள் செல்போன் மூலம் அடிக்கடி பேசி வந்தனர்.

கடந்த 5-ந் தேதி ரோஷினியிடம் பேசிய கமல்தீப், ‘எனது தாய்க்கு உடல் நலம் சரியில்லை. அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. கடனாக பணம் அல்லது தங்கநகைகளை தந்து உதவ வேண்டும். விரைவில் அந்த கடனை திரும்ப தருகிறேன்’ என்று கேட்டுள்ளார்.

இதை நம்பிய ரோஷினி, தனது தந்தையின் வீட்டில் இருந்து ரூ.40 லட்சம் மற்றும் 450 கிராம் தங்க நகைகளை எடுத்து கொண்டு கடந்த 6-ந் தேதி பஞ்சாப்பில் உள்ள கானா மாவட்டத்துக்கு சென்றார்.

அங்கு சென்றவுடன் கமல்தீப் தனது அண்ணன் தரம்வீரை, ரோஷினியிடம் அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் அங்குள்ள ஒரு வீட்டில் ரோஷினியை அமர வைத்த அவர்கள் பணம்-நகைகளை பெற்று கொண்டு அவற்றை பத்திரமாக வைக்க உறவினரிடம் கொடுத்து வருவதாக கூறி சென்றனர். பின்னர் நீண்டநேரம் ஆனபோதிலும் கமல்தீப்-தரம்வீர் திரும்ப வரவில்லை. இந்த நிலையில் தான் மோசடி வலையில் சிக்கியதை ரோஷினி உணர்ந்தார்.

இந்த நிலையில், தனது வீட்டில் இருந்த ரூ.40 லட்சம், 450 கிராம் தங்க நகைகளுடன் மகள் ரோஷினி மாயமாகி உள்ளதாக ஹெண்ணூர் போலீசில் அவருடைய தந்தை புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அப்போது, ரோஷினி பஞ்சாப்பில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அங்கு சென்ற போலீசார் ரோஷினியை மீட்டனர். மேலும் புகாரின் பேரில் போலீசார் கமல்தீப், தரம்வீர் ஆகியோர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடினர். ஆனால், அவர்கள் போலீசாரிடம் சிக்கவில்லை. இதையடுத்து போலீசார் ரோஷினியை பெங்களூரு அழைத்து வந்தனர். தலைமறைவாக உள்ள சகோதரர்களை ஹெண்ணூர் போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Next Story