திருமணம் செய்யும்படி வற்புறுத்திய கள்ளக்காதலியை கொன்று உடலை எரித்தவர் கைது


திருமணம் செய்யும்படி வற்புறுத்திய கள்ளக்காதலியை கொன்று உடலை எரித்தவர் கைது
x
தினத்தந்தி 22 Jan 2019 11:33 PM GMT (Updated: 22 Jan 2019 11:33 PM GMT)

திருமணம் செய்யும்படி வற்புறுத்திய கள்ளக்காதலியை கொன்று உடலை எரித்தவரை போலீசார் கைது செய்தனர்.

வசாய்,

மும்பை- ஆமதாபாத் நெடுஞ்சாலையில் பயந்தர் காட்டுப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் பாதி எரிந்த நிலையில் பெண்ணின் உடல் மீட்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் அந்த பெண் கல்லால் தாக்கி கொலை செய்து, பின்னர் தீ வைத்து எரிக்கப்பட்டது தெரியவந்தது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இதில், கொலையுண்ட பெண் பால்கர் மாவட்டம் நாலச்சோப்ராவை சேர்ந்த நிர்மலா(வயது47) என்பது தெரியவந்தது. அவரது செல்போனுக்கு அதே பகுதியை சேர்ந்த அப்ரார் முகமது ஆலம் சேக்(40) என்பவர் அடிக்கடி போன் செய்து பேசியிருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். இதில், அவர் தான் நிர்மலாவை கொலை செய்து உடலை எரித்தது தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக கீழ்க்கண்ட தகவல்கள் தெரியவந்தன.

நிர்மலாவுக்கும், முகமது ஆலம் சேக்கிற்கும் ஒரு வருடமாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அப்ரார் முகமது ஆலம் சேக்கிடம், நிர்மலா வற்புறுத்தி வந்தார். ஆனால் நிர்மலாவை திருமணம் செய்து கொள்வதில் அவருக்கு விருப்பம் இல்லை.

இந்தநிலையில் திருமணம் செய்துகொள்ளும் படி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால், ஆத்திரம் அடைந்த அவர் நிர்மலாவை தீர்த்து கட்ட முடிவு செய்தார். அதன்படி அவர் சம்பவத்தன்று திருமணம் தொடர்பாக பேசுவதற்காக மும்பை- ஆமதாபாத் நெடுஞ்சாலை பகுதிக்கு நிர்மலாவை அழைத்து உள்ளார். அங்கு வந்ததும் நிர்மலாவை அவர் கல்லால் தாக்கி கொலை செய்துள்ளார்.

பின்னர் அவரது உடலுக்கு தீ வைத்துவிட்டு ஓடிவிட்டார் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அப்ரார் முகமது ஆலம் சேக்கை கைது செய்தனர்.

Next Story