கரூர் அருகே போலி தாசில்தார் கைது; கார் பறிமுதல்


கரூர் அருகே போலி தாசில்தார் கைது; கார் பறிமுதல்
x
தினத்தந்தி 23 Jan 2019 11:15 PM GMT (Updated: 23 Jan 2019 7:24 PM GMT)

கரூர் அருகே போலி தாசில்தார் கைது செய்யப்பட்டார். அவர் பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நொய்யல்,

கரூர் மாவட்டம், புன்னம்சத்திரம் அருகே ஓலப்பாளையம் பிரிவு சாலையின் ஓரத்தில் தமிழ்நாடு அரசு முத்திரையுடன் கார் ஒன்று நீண்டநேரமாக நின்று கொண்டிருந்தது. இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் சந்தேகமடைந்து கரூர் மாவட்டம், வேட்டமங்கலம் (மேற்கு) கிராம நிர்வாக அதிகாரி பூபதிக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், அவர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து காரில் தூங்கிக் கொண்டிருந்த நபரிடம் விசாரித்தார். அப்போது அந்த நபர், தான் மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த பழனிவேல் (வயது 34) என்றும், திருச்சியில் நெடுஞ்சாலைத்துறையில் தனி தாசில்தாராக பணிபுரிந்து வருவதாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து அவரிடமிருந்த அடையாள அட்டையை சோதனை செய்தபோது, அதில் கவர்மெண்ட்-ஆப் தமிழ்நாடு, ரிவன்யூ டிபார்ட்மெண்ட் கரூர் மாவட்டம் என்றும், தமிழ்நாடு அரசு முத்திரையுடன் இருந்துள்ளது. மேற்படி காருக்குள் பார்த்தபோது, தேர்தல் சமயத்தில் அதிகாரிகள் பயன்படுத்தக்கூடிய 5 ரப்பர் சீல்கள் இருந்தன. இதுகுறித்து கிராமநிர்வாக அதிகாரி பூபதி வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, விபரம் கேட்டபோது, பழனிவேல் அரசு அதிகாரி இல்லை என்பது தெரியவந்தது.

இதுகுறித்து, வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் பழனிவேலுவை பிடித்து சென்று போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில், பழனிவேல் போலியான அடையாள அட்டையை வைத்து பல்வேறு இடங்களில் தாசில்தார் என கூறி வசூலில் ஈடுபட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பழனிவேலுவை கைது செய்தனர்.

பின்னர் பழனிவேலு பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிவேல் எங்கெல்லாம் சென்று வசூல் வேட்டையில் ஈடுபட்டார் என்பன உள்பட பல்வேறு கோணங்களில் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story