சத்தி வனப்பகுதியில் புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பு


சத்தி வனப்பகுதியில் புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பு
x
தினத்தந்தி 23 Jan 2019 10:45 PM GMT (Updated: 23 Jan 2019 8:43 PM GMT)

சத்தி வனப்பகுதியில் புலிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தாளவாடி,

சத்தியமங்கலம் வனப்பகுதியில் ஒரு லட்சத்து 4 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இங்கு 7 வனச்சரகங்கள் உள்ளன. மழைப்பொழிவுக்கு பின் வனத்தில் வாழும் விலங்குகள், தாவரங்கள், மரங்கள், நீர்நிலைகள் மற்றும் வனஉயிரினங்கள் நடமாட்டம் குறித்த கணக்கெடுப்பு பணி கடந்த 6 நாட்களாக நடைபெற்றது. இதற்கென சிறப்பு பயிற்சி பெற்ற வனஊழியர்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.

46 குழுக்களில் 320 பேர் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். ஒவ்வொரு குழுவிலும் வனவர் தலைமையில் 5 பேர் பணியை மேற்கொண்டனர். இந்த கணக்கெடுப்புக்கு என பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சாப்ட்வேரான செல்லிடப்பேசி மூலம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் தொடங்கப்பட்ட இடம், கணக்கெடுப்பு தூரம், அங்கு பார்த்தவற்றை பதிவு செய்வது என அந்தந்த இடத்தில் நடந்த நிகழ்வுகளை பதிவு செய்தனர்.

ஜி.பி.எஸ்., ரேஞ்சு பைண்டர் போன்ற கருவிகளை பயன்படுத்தி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கணக்கெடுப்பின்போது தலமலை, தாளவாடி வனப்பகுதியில் நேரடியாக புலிகளை பார்த்தனர். மேலும் இப்பகுதியில் சிறுத்தையின் கால்தடம், புலிகளின் கால்தடம், அவற்றின் எச்சம் பதிவானது. கடந்த ஆண்டை விட புலிகள் எண்ணிக்கை 74-ல் இருந்து 85 ஆக உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.

அனைத்து வனச்சரகங்களிலும் புலியின் கால்தடம் பதிவாகியிருப்பதால் புலிகளின் வாழ்விடம் 5 கி.மீ. தூரம் என்பதும் 3 கி.மீ. தூரத்திற்கு ஒரு புலி இருப்பதும் தெரிகிறது. ரேஞ்சு பைண்டர் மூலம் தொலைவில் உள்ள வனவிலங்குகள் நடமாட்டத்தையும் நீர்நிலைகளையும் ஆய்வு செய்தனர். 5 கி.மீ பரப்பளவிற்கு கண்ணில் தென்படும் வனவிலங்குகள், தாவரங்கள், நீர்நிலைகள், மரங்கள் என அனைத்தும் பதிவு செய்யப்பட்டது.

Next Story