கிருஷ்ணகிரியில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 4-வது நாளாக போராட்டம் 1,800 பேர் கைது


கிருஷ்ணகிரியில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 4-வது நாளாக போராட்டம் 1,800 பேர் கைது
x
தினத்தந்தி 25 Jan 2019 11:00 PM GMT (Updated: 25 Jan 2019 4:51 PM GMT)

கிருஷ்ணகிரியில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 4-வது நாளாக ஆர்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட்ட 1,800 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி, 

தமிழகம் முழுவதும் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு சார்பில் கடந்த 22-ந் தேதி முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று 4-வது நாளாக கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரன், மாதப்பன், நாராயணன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

இதில், சிறப்பு அழைப்பாளர்களாக வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில பொதுச் செயலாளர் பார்த்தீபன், அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் தமிழ்செல்வி, மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் தியோடர் ராபின்சன், மாநில சட்ட செயலாளர் நந்தகுமார், ஆசிரியர் முன்னேற்ற கழக நிர்வாகி அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சி.பி.எஸ்-ஐ ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும். பல்வேறு துறைகளில் தொழில்நுட்ப ஊழியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைந்திட வேண்டும். 21 மாத நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

தொடர்ந்து அண்ணா சிலை அருகில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட 932 பெண்கள் உள்பட மொத்தம் 1,800 பேரை கைது செய்தனர்.

Next Story