மோடி மீண்டும் பிரதமராக தேர்வாக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை தொடர் ஓட்டமாக செல்லும் தம்பதி


மோடி மீண்டும் பிரதமராக தேர்வாக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை தொடர் ஓட்டமாக செல்லும் தம்பதி
x
தினத்தந்தி 26 Jan 2019 10:45 PM GMT (Updated: 26 Jan 2019 7:41 PM GMT)

பிரதமர் நரேந்திரமோடி மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை கர்நாடக தம்பதியினர் தொடர் ஓட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஓட்டம் நேற்று கன்னியாகுமரியில் தொடங்கியது.

கன்னியாகுமரி,

கர்நாடக மாநிலம் கூர்க் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 57), இவரது மனைவி ரூபா (50). குமார் எந்திர உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர்கள், நரேந்திரமோடி 2-வது முறையாக மீண்டும் பிரதமராக தேர்வாக வேண்டும், நாட்டில் உள்ள அனைத்து வயதினரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும், இந்திய ராணுவ வீரர்களுக்கு நிதி திரட்டுவது உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை தொடர் விழிப்புணர்வு ஓட்டம் தொடங்கினர்.

இதற்கான தொடக்க நிகழ்ச்சி நேற்று காலை கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் நடந்தது. விசுவ இந்து பரிஷத் அமைப்பின் குமரி மாவட்ட செயலாளர் அய்யப்பன் தலைமை தாங்கினார். ஓட்டத்தை திருகோவில் திருமடத்தின் மாநில தலைவர் காளியப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தொடர் ஓட்டம் குறித்து தம்பதியினர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவில் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு போதிய உடற்பயிற்சி இல்லாததே காரணம் ஆகும். எனவே நாம் அனைவரும் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். பிரதமர் மோடி மீது மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது. எனவே அவர் 2-வது முறையாக இந்திய பிரதமராக வேண்டும்.

இந்த கருத்துகளை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை தொடர் ஓட்டத்தை தொடங்கியுள்ளோம். இந்த ஓட்டத்தை மதுரை, கிருஷ்ணகிரி, கர்நாடகா, மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், ஹரியானா, டெல்லி, சண்டிகர் வழியாக வருகிற ஏப்ரல் மாதம் 10-ந் தேதி காஷ்மீர் ஸ்ரீநகரில் நிறைவு செய்ய உள்ளோம். இந்த பயணத்தில் தினமும் 60 கிலோ மீட்டர் என்ற வகையில் 3 ஆயிரத்து 600 கிலோ மீட்டர் துரத்தை 60 நாட்களில் கடக்க உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story