தற்காலிக ஆசிரியர் பணிக்கு 4-வது நாளாக விண்ணப்பிக்க குவிந்த பட்டதாரிகள்


தற்காலிக ஆசிரியர் பணிக்கு 4-வது நாளாக விண்ணப்பிக்க குவிந்த பட்டதாரிகள்
x
தினத்தந்தி 28 Jan 2019 10:45 PM GMT (Updated: 28 Jan 2019 8:36 PM GMT)

புதுக்கோட்டையில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க 4-வது நாளாக பட்ட தாரிகள் குவிந்தனர்.

புதுக்கோட்டை,

ஜாக்டோ-ஜியோ அமைப்பில் அங்கம் வகிக்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22-ந் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் நேற்றும் தொடர்ந்து நடைபெற்றது. இதற்கிடையில் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட 7 ஆயிரத்து 30 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வனஜா நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

இதற்கிடையில் தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை, தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியமாக மாதத்திற்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்து உள்ளது. இந்த பணியில் முதல் கட்டமாக ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் மற்றும் ஓய்வுபெற்ற ஆசிரியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வாங்கும் பணி கடந்த 25-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி பெண்கள் மற்றும் ஆண்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் நேற்று 4-வது நாளாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் விண்ணப்பிக்க குவிந்தனர்.

இவர்களிடம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் தற்காலிக ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்களை பெற்று கொள்கின்றனர். இதுவரை புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு சுமார் 6 ஆயிரத்து 700 பேர் விண்ணப்பித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 25, 26-ந் தேதிகளில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் பணிநியமன ஆணை வழங்கப்படும் என தகவல் பரவியது. இதையடுத்து தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்து இருந்த பட்டதாரிகள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் நேற்று காலை முதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு வந்தனர். ஆனால் நீண்டநேரம் காத்திருந்தும் அவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்படவில்லை. இதனால் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 

Next Story