ஜார்ஜ் பெர்னாண்டஸ் மரணம்: முதல்-மந்திரி குமாரசாமி உள்பட தலைவர்கள் இரங்கல் சிறந்த சமதர்மவாதி என புகழாரம்


ஜார்ஜ் பெர்னாண்டஸ் மரணம்: முதல்-மந்திரி குமாரசாமி உள்பட தலைவர்கள் இரங்கல் சிறந்த சமதர்மவாதி என புகழாரம்
x
தினத்தந்தி 29 Jan 2019 11:00 PM GMT (Updated: 29 Jan 2019 6:55 PM GMT)

ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு முதல்-மந்திரி குமாரசாமி உள்பட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவர் ஒரு சிறந்த சமதர்மவாதி என்று புகழாரம் சூட்டினர்.

பெங்களூரு,

முன்னாள் மத்திய ராணுவ மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டஸ் நேற்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி உள்பட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

குமாரசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ஜார்ஜ் பெர்னாண்டஸ் மரணம் அடைந்த செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன். அவர் ஒரு சிறந்த சமதர்மவாதியாக இருந்தார். கர்நாடகத்தில் கொங்கன் ரெயில்வேயை உருவாக்கியதில் அவரது பங்கு மிக முக்கியமானது. இதற்காக கர்நாடக மக்கள் அவரை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்வார்கள். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் தேவேகவுடா வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், “ஜார்ஜ் பெர்னாண்டஸ் மரணம் அடைந்த செய்தி கேட்டு வருத்தம் அடைந்தேன். அவர் ராணுவத்துறை மந்திரியாக இருந்தபோது சிறப்பான முறையில் பணியாற்றினார். அவர் அந்த பதவிக்கு தகுதியானவர். அவர் ஒரு சிறந்த சமதர்மவாதி. தொழிலாளர் போராட்டங்களுக்கு அவர் தூணாக இருந்தார். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்னாள் ராணுவ மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டஸ் மரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன். தனது எளிமையான நடவடிக்கை மூலம் அவர் மக்களின் மனதை வென்றார். ராணுவத்துறை மந்திரியாக சிறப்பான முறையில் பணியாற்றினார். அவர் கன்னடர் என்பது நமக்கெல்லாம் பெருமை. கர்நாடகத்தில் பிறந்தாலும் வெளிமாநிலங்களுக்கு சென்று தனது அரசியல் வாய்ப்ைப ஏற்படுத்தி கொண்டவர். தொழிலாளர்களின் நலனுக்காக குரல் கொடுத்தார். அவரது மறைவுக்கு ஆழ்ந்து இரங்கலை தெரிவிக்கிறேன்” என்றார்.

முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ஜார்ஜ் பெர்னாண்டஸ் எனக்கு குருவை போன்றவர். அவரிடம் இருந்து நான் அரசியல் கற்றுக்கொண்டேன். அவர் மரணம் அடைந்த செய்தி கேட்டு மிகுந்த துக்கமடைந்தேன். தொழிலாளர்களின் நலனுக்காக அவர் போராடினார். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Next Story