புதுக்கோட்டை அருகே பழனிக்கு பாதயாத்திரை சென்று திரும்பிய பக்தர்களுக்கு வாந்தி, மயக்கம் மருத்துவமனையில் அனுமதி


புதுக்கோட்டை அருகே பழனிக்கு பாதயாத்திரை சென்று திரும்பிய பக்தர்களுக்கு வாந்தி, மயக்கம் மருத்துவமனையில் அனுமதி
x
தினத்தந்தி 29 Jan 2019 11:00 PM GMT (Updated: 29 Jan 2019 7:09 PM GMT)

புதுக்கோட்டை அருகே, பழனிக்கு பாதயாத்திரை சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிய பக்தர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து 50-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள ஆரியூரை சேர்ந்த பக்தர்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஒரு குழுவாக கடந்த 26-ந்தேதி பழனிக்கு பாதயாத்திரையாக சென்றனர். அங்கு சென்ற பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றிவிட்டு நேற்று முன்தினம் இரவு அனைவரும் இணைந்து உணவு சமைத்து சாப்பிட்டு உள்ளனர். பின்னர் அவர்கள் அன்று இரவே சொந்த ஊரான ஆரியூருக்கு பஸ்சில் ஏறி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை ஆரியூரில் பழனிக்கு சென்று வந்த பக்தர்கள் சிலருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக மதியநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் பழனிக்கு சென்ற அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனைவரும் கொண்டு செல்லப்பட்டனர்.

இதையடுத்து மதியநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தொடர்ந்து அன்னவாசல் அரசு மருத்துவமனையில் அருண்குமார் (வயது 21), சுப்பிரமணி (45), பாலமுருகன் (35), பழனியப்பன் (29), வீரமணி (25), தேவி (40), ரம்யா (24), லட்சுமி (21), பாக்கியம், ஆரியமாலா உள்ளிட்டோரும், பலர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், சிலர் தனியார் மருத்துவமனையிலும் 50-க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையறிந்த அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் ராமசாமி அன்னவாசல் மற்றும் மதியநல்லூர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பழனிக்கு பாத யாத்திரை சென்று வந்தவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் அன்னவாசல் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story