தமிழக காவல்துறையில் 202 கைரேகை சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான நேர்முகத்தேர்வு சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் கட்டணமில்லா பயிற்சி

தமிழக காவல்துறையில் 202 கைரேகை சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான நேர்முகத்தேர்வுக்கு, சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் கட்டணமில்லா பயிற்சி அளிக்கப்படுகிறது.
சென்னை,
தமிழக காவல்துறையில் 202 கைரேகை சப்-இன்ஸ்பெக்டர்கள் பதவிக்கான அறிவிப்பு கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது. இதற்காக ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த 202 பதவிகளில் 40 பதவிகள் காவல்துறையில் பணியாற்றுபவர்களுக்காக ஒதுக்கப்பட்டு இருந்தன.
விண்ணப்பித்தவர்களுக்கான எழுத்து தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ந் தேதி நடந்தது. இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கடந்த 20-ந் தேதி உயரம் சரிபார்க்கப்பட்டது. இந்த நிலையில் பிப்ரவரி 11-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நேர்முகத்தேர்வு நடைபெற இருக்கிறது.
கட்டணமில்லா பயிற்சி
இந்த நேர்முகத்தேர்வில் கலந்துகொள்பவர்களுக்கு சைதை துரைசாமியின் மனிதநேய மையம் கட்டணமில்லா பயிற்சியை அளிக்கிறது. இந்த பயிற்சியை, காவல்துறையில் பணியாற்றிய அனுபவமிக்கவர்கள் அளிக்கிறார்கள். இதில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் தங்களுடைய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் சென்னை-35, சி.ஐ.டி. நகர், முதல் பிரதான சாலையில் உள்ள மனிதநேய மைய அலுவலகத்துக்கு நேரில் பதிவு செய்துகொள்ளலாம்.
நேர்முகத்தேர்வில் எவ்வாறு கலந்துகொள்ள வேண்டும்? என்னென்ன கேள்விகள் கேட்கப்படும்? அதற்கு எந்தெந்த வகையில் பதில் அளிக்க வேண்டும்? என்பது உள்பட அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்பட இருக்கின்றன.
இந்த தகவலை மனிதநேய மையத்தின் பயிற்சி இயக்குனர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story