தஞ்சை-நாகை இடையே நான்கு வழிச்சாலை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு


தஞ்சை-நாகை இடையே நான்கு வழிச்சாலை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 30 Jan 2019 10:45 PM GMT (Updated: 30 Jan 2019 6:49 PM GMT)

தஞ்சை-நாகை இடையே நான்கு வழிச்சாலை அமைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. குற்றம் சாட்டி உள்ளார்.

நீடாமங்கலம்,

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள கோவில்வெண்ணியில் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மன்னார்குடி டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகம் முழுவதும் தி.மு.க. ஊராட்சி சபை கூட்டங்களை நடத்தி வருகிறது.

இந்த முயற்சியை வேறு எந்த கட்சியும் முன்னெடுக்கவில்லை. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால், பல கிராமங் களில் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை.

தஞ்சை-நாகை இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டம் கடந்த 8 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. நான்கு வழிச்சாலை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. கஜா புயலால் மன்னார்குடி தொகுதியில் பாதிப்பில்லை என சொன்னவர்கள் அ.தி.மு.க.வினர். தமிழகத்தில் நடைபெற்று வரும் ஊழல் ஆட்சியை அகற்ற வேண்டுமானால், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ராசமாணிக்கம், நீடாமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் விசு.அண்ணாதுரை, முன்னாள் மாநில மாணவரணி இணைச்செயலாளர் வக்கீல் சோம.செந்தமிழ்ச்செல்வன், கோவில்வெண்ணி ஊராட்சி செயலாளர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து நகர், சித்தமல்லி ஆகிய ஊராட்சிகளிலும் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டங்கள் நடந்தன.

Next Story