ஒரு தலைக்காதலால் விபரீதம்: மோட்டார் சைக்கிளால் மோதி தம்பதியை கொல்ல முயற்சி; வாலிபர் கைது


ஒரு தலைக்காதலால் விபரீதம்: மோட்டார் சைக்கிளால் மோதி தம்பதியை கொல்ல முயற்சி; வாலிபர் கைது
x
தினத்தந்தி 3 Feb 2019 10:00 PM GMT (Updated: 3 Feb 2019 8:30 PM GMT)

நெல்லை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதியை மோட்டார் சைக்கிளால் மோதி கொல்ல முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஒருதலையாக காதலித்த பெண்ணை வேறொருவருக்கு திருமணம் செய்து கொடுத்த ஆத்திரத்தில் அந்த வாலிபர் இந்த விபரீத செயலில் ஈடுபட்டு உள்ளார்.

மானூர், 

நெல்லை டவுனை சேர்ந்தவர் பிச்சையா (வயது 53). மானூரை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (26). இவர் பிச்சையாவின் மகளை ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த பிச்சையா கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனது மகளுக்கு வேறு ஒரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து கொடுத்து விட்டார். இதனை அறிந்த சுரேஷ்குமார் தான் உயிருக்கு உயிருக்காக காதலித்து வந்த பெண் தனக்கு கிடைக்கவில்லையே என்று மனவேதனை அடைந்தார். இதனால் அவர் பிச்சையா மீது ஆத்திரத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று பிச்சையா, தனது மனைவி முருகேஸ்வரியுடன் மோட்டார் சைக்கிளில் ராமையன்பட்டி பகுதியில் சென்றுகொண்டிருந்தனர். அந்த பகுதியில் சுரேஷ்குமார் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது பிச்சையாவை பார்த்ததும் ஆத்திரமடைந்த அவர், தனது மோட்டார் சைக்கிளால், பிச்சையா தம்பதியர் வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதி கொல்ல முயன்றாராம். இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பிச்சையாவும், முருகேஸ்வரியும் லேசான காயமடைந்து உயிர் தப்பினர்.

மேலும் ஆத்திரம் அடங்காத சுரேஷ்குமார், அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தனது மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார். அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று அந்த 2 பேரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுகுறித்த புகாரின்பேரில், மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த சுரேஷ்குமாரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

ஒரு தலையாக காதலித்த பெண்ணை வேறொருவருக்கு திருமணம் செய்து கொடுத்த ஆத்திரத்தில் அவரது பெற்றோரை வாலிபர் கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story