தை அமாவாசையையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


தை அமாவாசையையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 4 Feb 2019 11:00 PM GMT (Updated: 4 Feb 2019 5:12 PM GMT)

தை அமாவாசையையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி,

தை அமாவாசையையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இந்த வழிபாட்டில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தர்மபுரி எஸ்.வி.ரோடு அபய ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டின்போது சாமிக்கு பல்வேறு பழங்கள் மற்றும் நறுமண பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமி வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோன்று அரிகரநாத சாமி கோவில் தெருவில் உள்ள தாசஆஞ்சநேயர் கோவில் ஆகியவற்றில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு நடந்தது.

வே.முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோவிலில் தை அமாவாசையையொட்டி சாமிக்கு பல்வேறு அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை நடத்தப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த கோவிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

தொப்பூர் கணவாய் பகுதியில் அமைந்துள்ள மன்றோ குளக்கரை ஆஞ்சநேயர் சாமி கோவிலில் தை அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு பால், தயிர் மற்றும் சந்தனம் பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சாமி சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல் குப்புசெட்டிப்பட்டி வீரஆஞ்சநேயசாமி கோவில், கெரகோடஅள்ளி ஆஞ்சநேயர் கோவில், வர்ணதீர்த்தம், சோகத்தூர் ஆஞ்சநேயர் கோவில் உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களிலும் நடைபெற்ற அமாவாசை சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story