தஞ்சை-விழுப்புரம் இடையே ரூ.250 கோடியில் ரெயில்பாதையை மின்மயமாக்கும் பணி 2021-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டம்


தஞ்சை-விழுப்புரம் இடையே ரூ.250 கோடியில் ரெயில்பாதையை மின்மயமாக்கும் பணி 2021-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டம்
x
தினத்தந்தி 7 Feb 2019 10:30 PM GMT (Updated: 7 Feb 2019 7:32 PM GMT)

தஞ்சை-விழுப்புரம் இடையே ரூ.250 கோடியில் ரெயில்பாதையை மின்மயமாக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை 2021-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்,

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை மாவட்டம் சிறந்த சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது. மாமன்னன் ராஜராஜசோழன் கட்டிய தஞ்சை பெரியகோவில் ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. உலக புகழ் பெற்ற சரசுவதி மகால் நூலகம் தஞ்சையில் அமைந்து உள்ளது.

தஞ்சைக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தஞ்சை வழியாக 30-க்கும் மேற்பட்ட பயணிகள் ரெயில்களும், 15-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. தஞ்சை-திருச்சி இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்கப்பட்டு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

மேலும் ரெயில் போக்குவரத்தை விரைவுபடுத்தவும், செலவுகளை குறைக்கவும் திருச்சி-தஞ்சை-திருவாரூர்-காரைக்கால் இடையே உள்ள 156 கிலோ மீட்டர் தூரத்தை மின்மயமாக்குவதற்கு ரூ.227 கோடியே 26 லட்சத்தை ரெயில்வே அமைச்சகம் ஒதுக்கியுள்ளது. இதற்காக ரெயில் பாதையின் இருபுறமும் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தென்மாவட்டங்களில் இருந்து ரெயில் மூலம் சென்னைக்கு செல்வதற்கு திருச்சியில் இருந்து தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் வழியாக செல்லும் மெயின்பாதையானது திருச்சி-விழுப்புரம் ரெயில்பாதைக்கு மாற்றாக திகழ்கிறது. மீட்டர்கேஜ் பாதையாக இருந்தபோது தென்மாவட்டங்களில் இருந்து தஞ்சை வழியாக தான் சென்னைக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. திருச்சி-விழுப்புரம் இடையே ரெயில்பாதை அமைக்கப்பட்ட பின்னர் பெரும்பாலான ரெயில்கள் அந்த பாதையின் வழியாக இயக்கப்பட்டு வருகிறது.

மீட்டர்கேஜ் பாதையாக இருந்தபோது தஞ்சை வழியாக இயக்கப்பட்ட அனைத்து ரெயில்களையும் மீண்டும் இதே வழியாக சென்னைக்கு இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்தநிலையில் பயணநேரத்தை குறைக்கும் வகையில் திருச்சி-காரைக்கால் இடையே ரெயில்பாதையை மின்மயமாக்கும் பணி நடைபெற்று கொண்டிருக்கும்போதே தஞ்சை-விழுப்புரம் இடையே 228 கிலோமீட்டர் ரெயில்பாதையை மின்மயமாக்க ரூ.250 கோடியை மத்தியஅரசு ஒதுக்கியது.

இந்த பணியை 4 கட்டங்களாக செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதல்கட்டமாக விழுப்புரம்-கடலூர் இடையே 46 கிலோ மீட்டர் ரெயில்பாதையை மின்மயமாக்கும் பணி தொடங்கப்பட்டது. மின்கம்பங்கள் ஊன்றும் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது. 1,600 மின்கம்பங்கள் ஊன்றப்பட்டுள்ளன. இதையடுத்து மின்கம்பங்களுக்கு இடையே மின்கம்பிகளை இணைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. முதல்கட்ட பணியை அடுத்தமாதம்(மார்ச்) முடிக்க திட்டமிடப்பட்டு ரெயில் விகாஷ் நிகாம் லிமிடெட்டானது பணியை துரிதப்படுத்தியுள்ளது.

அதேபோல அடுத்தகட்டமாக கடலூர்-மயிலாடுதுறை இடையே ரெயில்பாதையை மின்மயமாக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் முதல் இந்த பணி முழுவீச்சில் நடைபெறும். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமானது ஆன்மிக தலங்கள் நிறைந்த பகுதியாக திகழ்கிறது. ஆன்மிக தலங்களான சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணத்தை இணைக்கும் வகையில் மின்மயமாக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும் கடலூர், மயிலாடுதுறையில் துணை மின் நிலையங்களும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளுடன் சேர்த்து மயிலாடுதுறை-திருவாரூர் இடையே 38 கிலோமீட்டர் தூரத்திற்கு ரெயில்பாதையை மின்மயமாக்கும் பணியும் நடைபெற உள்ளது. தஞ்சை-விழுப்புரம் இடையே ரெயில்பாதையை மின்மயமாக்கும் பணி 2021-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தஞ்சை-விழுப்புரம் இடையே தற்போது டீசல் என்ஜின்கள் மூலம் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பாதை மின்மயமாக்கப்பட்டால் டீசல் என்ஜின்கள் எல்லாம் மின்சாரம் மூலம் இயங்கக்கூடிய என்ஜின்களாக மாற்றம் செய்யப்படும். இதனால் பயணிகள் ரெயில் போக்குவரத்து மேம்படும். பயண நேரம் வெகுவாக குறையும். அதே நேரத்தில் கூடுதலாக ரெயில்கள் இயக்கப்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

Next Story