சென்னை விமான நிலையத்தில் கழிவறை தண்ணீர் தொட்டியில் ரூ.34 லட்சம் தங்கம் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் கழிவறை தண்ணீர் தொட்டியில் ரூ.34 லட்சம் தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 8 Feb 2019 9:45 PM GMT (Updated: 8 Feb 2019 9:09 PM GMT)

சென்னை விமான நிலையத்தில் மேற்கத்திய கழிவறையில் உள்ள தண்ணீர் தொட்டியில் கிடந்த ரூ.34 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள், விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர்.

இந்தநிலையில் பன்னாட்டு விமான நிலைய வருகை பகுதியில் உள்ள கழிவறையை ஊழியர்கள் சுத்தம் செய்தனர். அப்போது மேற்கத்திய கழிவறையில் உள்ள தண்ணீர் தொட்டியில் ஒரு பார்சல் கேட்பாரற்ற நிலையில் கிடப்பதை கண்ட ஊழியர்கள், இதுபற்றி விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக அதிகாரிகள், கழிவறைக்கு விரைந்துசென்று தண்ணீர் தொட்டியில் கிடந்த பார்சலை எடுத்து பிரித்து பார்த்தனர். அதில் ரூ.34 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ எடை கொண்ட ஒரு தங்க கட்டி இருந்தது.

அந்த தங்கத்தை வெளிநாட்டில் இருந்து விமானத்தில் கடத்தி வந்தவர்கள், சுங்க இலாகா அதிகாரிகளுக்கு பயந்து, கழிவறை தண்ணீர் தொட்டியில் வீசி சென்று இருக்கலாம் என தெரிகிறது.

அந்த பார்சலை வீசி சென்றது யார்? என்பதை அறிய அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை சுங்க இலாகா அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் சந்தேகப்படும்படியாக ஒரு நபர், கழிவறைக்கு சென்றுவிட்டு வெளியே வரும் காட்சி பதிவாகி இருந்தது.

இதையடுத்து சுங்க இலாகா பகுதியில் சந்தேகப்படும்படியாக இருந்த பஞ்சாப் வாலிபர் உள்பட 3 பேரை பிடித்து அவர்களுக்கும், தங்க கடத்தலுக்கும் தொடர்பு உள்ளதா? என்று விசாரித்து வருகின்றனர்.

ஆனால் அவர்களுக்கும், இந்த கடத்தலுக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை என்றும், விசாரணைக்கு பிறகு அவர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். கழிவறை தண்ணீர் தொட்டியில் தங்கத்தை வீசி சென்றது யார்? என்பது குறித்து சுங்க இலாகா அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story