கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா அடுத்த மாதம் 15,16-ந் தேதிகளில் நடக்கிறது


கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா அடுத்த மாதம் 15,16-ந் தேதிகளில் நடக்கிறது
x
தினத்தந்தி 8 Feb 2019 10:30 PM GMT (Updated: 8 Feb 2019 9:58 PM GMT)

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா அடுத்த மாதம் 15,16-ந் தேதிகளில் நடக்கிறது.

ராமேசுவரம்,

இந்தியா-இலங்கை இடையே உள்ள கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இங்கு நடைபெறும் திருவிழாவில் இருநாடுகளை சேர்ந்த பக்தர்களும் கலந்து கொள்வது வழக்கம். இந்த ஆண்டு கச்சத்தீவு திருவிழா வருகிற மார்ச் 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதனையொட்டி யாழ்ப்பாணம் மறைமாவட்டம் மூலம் சிவகங்கை மறைமாவட்ட ஆயருக்கும், வேர்க்கோடு புனித சூசையப்பர் ஆலய பங்குத்தந்தைக்கும் அழைப்பிதழ் வந்துள்ளது. அதைத்தொடர்ந்து வேர்க்கோடு பங்குத்தந்தை தேவசகாயம் தலைமையில் திருவிழாவுக்கு செல்வது தொடர்பான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த திருவிழாவில் கலந்து கொள்ள செல்லும் பக்தர்கள் விசைப்படகில் மட்டுமே அழைத்துச்செல்லப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக இந்த திருவிழாவுக்கு நாட்டுப்படகுகளில் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்ல விருப்பம் தெரிவித்து இதுவரை 63 விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பெயர் பதிவு செய்துள்ளனர். இதனிடையே நாட்டுப்படகில் செல்வதற்காக மீனவர்கள் மாவட்ட கலெக்டரிடம் அனுமதி கோரியுள்ளனர். ஆனால் இதுவரை எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை.

இதுகுறித்து நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர் அருள் கூறியதாவது:- கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவில் திருவிழாவுக்கு பாரம்பரியமாக நாட்டுப்படகில் சென்று வந்தோம். நாட்டுப்படகில் செல்வது பாதுகாப்பான பயணம் தான். கடந்த ஆண்டு உயர்நீதிமன்றம் நாட்டுப்படகில் செல்லலாம் என உத்தரவிட்டுள்ளது. தற்போது பாம்பனில் இருந்து நாட்டுப் படகுகளில் செல்வதற்காக ஒரு படகுக்கு 23 பேர் வீதம் 20 படகுகளில் செல்ல 460 பேர் பெயர் பதிவு செய்துள்ளனர்.

எனவே நாட்டுப்படகில் செல்வதற்கு உரிய அனுமதியை தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் வழங்க வேண்டும். இது எங்களின் வழிபாட்டு உரிமையாகும். இலங்கை அரசு நாட்டுப்படகில் வரக்கூடாது என்று எதுவும் கூறவில்லை. தமிழக அரசு நாட்டுப்படகுகளை அனுமதிக்காதது வருத்தமளிக்கிறது. எனவே நாட்டுப்படகில் சென்று புனித அந்தோணியாரை தரிசிக்க அனுமதி வழங்க வேண்டும். எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் மீனவர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story