கொல்லங்கோட்டில் ஈ–சேவை மையம், தையல் கடையில் தீ விபத்து பல லட்சம் ரூபாய் பொருட்கள் சேதம்


கொல்லங்கோட்டில் ஈ–சேவை மையம், தையல் கடையில் தீ விபத்து பல லட்சம் ரூபாய் பொருட்கள் சேதம்
x
தினத்தந்தி 9 Feb 2019 10:15 PM GMT (Updated: 9 Feb 2019 2:42 PM GMT)

கொல்லங்கோட்டில் ஈ–சேவை மையம், தையல் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.

கொல்லங்கோடு,

கொல்லங்கோடு அருகே உள்ள பனவிளையை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 32). இவர் கொல்லங்கோடு, கண்ணனாகம் சந்திப்பில் ஈ–சேவை மையம் நடத்தி வருகிறார். இந்த மையத்தின் அருகே சிவகுமார் (42) என்பவரின் தையல் கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ஈ–சேவை மையத்தையும், தையல் கடையையும் மூடிவிட்டு சென்றனர்.

நள்ளிரவில் ஈ–சேவை மையத்தில் இருந்தும், தையல் கடையில் இருந்தும் புகை மூட்டம் வெளிவந்தது. சிறிது நேரத்தில் தீ பிடித்து எரிய தொடங்கியது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் கொல்லங்கோடு மற்றும் குழித்துறை தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர். அத்துடன் கடைகளின் உரிமையாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தையல் கடையில் இருந்த துணிகள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்ததால் தீயை அணைக்கும் பணியில் சிரமம் ஏற்பட்டது. இதனால் வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் ஈ–சேவை மையத்தில் இருந்த கம்ப்யூட்டர்கள், ஜெராக்ஸ் எந்திரம், கண்காணிப்பு கேமரா போன்ற மின்சாதன பொருட்களும், தையல் கடையில் இருந்த தையல் எந்திரங்கள், துணிகள் போன்றவையும் எரிந்து நாசமாயின. இது குறித்து அருண்குமாரும், சிவகுமாரும் கொல்லங்கோடு  போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரில், ரூ.30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமானதாக கூறியுள்ளனர்.

இதுகுறித்து கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story