சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்ற நைஜீரிய ஆசாமி கைது


சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்ற நைஜீரிய ஆசாமி கைது
x
தினத்தந்தி 10 Feb 2019 10:30 PM GMT (Updated: 10 Feb 2019 5:26 PM GMT)

சென்னை நீலாங்கரை கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு பிரியாணி கடை அருகே நின்றுகொண்டு, கல்லூரி மாணவர்களுக்கு நைஜீரிய நாட்டு ஆசாமி ஒருவர் போதைப்பொருள் விற்பனை செய்வதாக மாநில போதைப்பொருள் தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

சென்னை, 

துணை போலீஸ் சூப்பிரண்டு புருஷோத்தமன் மேற்பார்வையில் மாநில போதைப்பொருள் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் நேற்று முன்தினம் இரவு நீலாங்கரை பகுதிக்கு போலீஸ் படையுடன் சென்றார். அங்கு குறிப்பிட்ட பிரியாணி கடை அருகே நின்றுகொண்டிருந்த நைஜீரிய ஆசாமியை மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர்.

அவர் சென்னை காரப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் தங்கியிருப்பது தெரியவந்தது. அவரது விசா காலமும் முடிவடைந்திருந்தது. அவர் தங்கியிருந்த பண்ணை வீட்டில் சோதனை நடத்திய போலீசார் அங்கிருந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள கொக்கைன், கேட்டமின் போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனர். நைஜீரிய ஆசாமி கைது செய்யப்பட்டார். அவரது பெயர் இக்கெசுக்வு.

அவருக்கு சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலோடு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். அதன் அடிப்படையில் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story