நன்செய் இடையாற்று ராஜாசுவாமி கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


நன்செய் இடையாற்று ராஜாசுவாமி கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 10 Feb 2019 10:30 PM GMT (Updated: 10 Feb 2019 8:39 PM GMT)

நன்செய் இடையாற்று கிராமத்தில் உள்ள ராஜாசுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

கரூர், 

நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டம், நன்செய் இடையாற்று கிராமத்தில் கொங்கு வெள்ளாளக்கவுண்டர், பண்ணை குலம், செல்லன் குலம், மணியன் குலம், தூரன் குலம் குடிபாடு மக்களுக்கு பாத்தியப்பட்ட பிரசித்தி பெற்ற ராஜாசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் விநாயகர், இளையநாயக்கர், பேச்சி, சடச்சி, கன்னிமார், ராசியண்ண சுவாமி, கோடந்தூர் மணிவேல் முத்து கருப்பண்ண சுவாமி ஆகிய பரிவார தெய்வங்களும் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து ராஜகோபுர விமானங்கள் நிறைவு பெற்று பஞ்சவர்ணங்களினால் அலங்கரித்தும், புதியதாக மயில் வாகனம், புதிய தோரணவாயில் அமைக்கும் பணியும் முடிவடைந்தது. இக்கோவிலில் ராஜாசுவாமி என்ற திருநாமத்துடன் விளங்கும் முருகன் பெளத்த மதத்தில் புத்தர் காலத்தின் தாமரைப் பூவை கையில் ஏந்திய வண்ணமாக உள்ளது. மேலும் கொங்கு சமுதாய குடிபாடு கோவில்களில் முருகன் கோவில் உள்ள ஓரே கோவில் இக்கோவிலாகும். இத்தனை சிறப்புகள் உள்ள இக்கோவிலில் நேற்று வெகுவிமர்சையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தையொட்டி கங்கை, காவிரி, அமராவதி மற்றும் புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் மற்றும் 141 வகையான மூலிகை பொருட்களை கொண்டு யாக சாலையில் வைத்து சிறப்பு யாகம் நடந்தது. தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக ராஜாசுவாமி கோவிலை சுற்றி வந்தனர். பின்னர் ராஜாசுவாமி கோவில் கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். தொடர்ந்து பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கும்பாபிஷேக விழாவில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தொழில் அதிபர் ஷோபிகா இம்பெக்ஸ் என்.மாரப்பன், எம். சிவசாமி, முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜா பழனிசாமி, எல்.என்.எஸ். கூட்டுறவு வங்கி தலைவர் பி.என்.சிவசாமி, பால் பண்ணை உரிமையாளர்கள் மோகன்ராஜ், எஸ்.வேலுச்சாமி, வி.சுந்தர்ராஜ், மல்லிகா டெக்ஸ் எம்.சேகர், எஸ்.சிவா, ரைஸ்.கே.பாலகுருசுவாமி, எஸ்.ஆர்.டி.ராஜேந்திரன், அணைப்பாளையம் கூட்டுறவு பால் சங்க செயலாளர் லோகநாதன், அஜந்தா டிரேடர்ஸ் நல்லசேனாதிபதி, ஆகாஷ் பைனான்ஸ் பொன்னுசாமி, துளசி கொடும்பு பாலசுப்பிரமணியன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் டாக்டர் பழனிவேலன், கோவில் அறங்காவலர்கள் ஆர்.மாரப்பன், பி.மோகன், ஏ.தங்கவேல், கிருத்திகை கட்டளைக்குழு செயலாளர் ரெட்டிபாளையம் என்.கந்தசாமி, துணைத்தலைவர் பொன்னுசாமி, பொருளாளர் கரூர் ராஜாமணி பழனிசாமி, துணைத்தலைவர்கள் பிரேம் டெக்ஸ் பி.கந்தசாமி, ஆர்.ஆர். கன்ஸ்ட்ரக்சன் ஆர்.ராமசாமி, ஓருங்கிணைப்பாளர்கள் வனிதா பைனான்ஸ் கே.கந்தசாமி, மணி, கிருத்திகை கமிட்டி தலைவர் ஆனந்தன், துணை செயலாளர் கருப்பையா மற்றும் குடிபாடு மக்கள் செய்திருந்தனர். 

Next Story