மின்வாரிய ஊழியர் வீட்டில் 22 பவுன் நகை, பணம் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு போலீசார் வலைவீச்சு


மின்வாரிய ஊழியர் வீட்டில் 22 பவுன் நகை, பணம் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 11 Feb 2019 10:30 PM GMT (Updated: 11 Feb 2019 8:26 PM GMT)

அரூர் அருகே மின்வாரிய ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் 22 பவுன் நகை, ரூ.12 ஆயிரம் ஆகியவற்றை திருடிச்சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அரூர்,

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள பறையப்பட்டி புதூரை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 45). இவர் தீர்த்தமலை மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி இளமதி. நேற்று முன்தினம் ராமலிங்கம் பணிக்கு சென்று விட்டார். இளமதி வீட்டை பூட்டி விட்டு அரூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தார். பின்னர் மாலை இளமதி வீட்டுக்கு வந்தார்.

அப்போது கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அங்கு பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைத்திருந்த 60 கிராம் வெள்ளி மற்றும் ரூ.12 ஆயிரம் திருட்டு போனது. மேலும் சமையல் அறையில் ஒரு பையில் மறைத்து வைத்திருந்த 22 பவுன் நகையும் திருட்டு போனது தெரியவந்தது.

இதுகுறித்து கோபிநாதம்பட்டி கூட்ரோடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது வீடு பூட்டி இருப்பதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் பூட்டை உடைத்து நகை, வெள்ளி மற்றும் பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story