நிலக்கோட்டை அருகே பரபரப்பு, தாய்- 3 மகன்களுடன் விஷம் குடித்து தற்கொலை முயற்சி


நிலக்கோட்டை அருகே பரபரப்பு, தாய்- 3 மகன்களுடன் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 11 Feb 2019 11:00 PM GMT (Updated: 11 Feb 2019 9:21 PM GMT)

நிலக்கோட்டை அருகே குடும்ப தகராறு காரணமாக தாய் தனது 3 மகன்களுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நிலக்கோட்டை, 

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகேயுள்ள விராலிபட்டி பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் நிலக்கோட்டை பகுதியில் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி செல்வி. இவர்களுக்கு கதிரேசன் (வயது 8), ரவிக்குமார் (6), குமரேசன் (5) என்ற 3 மகன்கள் உள்ளனர்.

இவர்கள் நிலக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்தனர். அவர்களுக்கு பள்ளி கட்டணம் செலுத்த பாலமுருகன் பணம் தரவில்லை என தெரிகிறது. இதனால் கடந்த சில தினங்களாக வீட்டில் கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. செல்வி கூலி வேலைக்கு சென்று வீட்டுக்கு செலவுகளை கவனித்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று காலையில் பாலமுருகன் வேலைக்கு சென்று விட்டார். பின்னர் இரவு வீடு திரும்பினார். அப்போது கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த செல்வி, தனது மூன்று மகன்களுடன் அரளி விதையை அரைத்துக் குடித்து வீட்டில் மயங்கி விழுந்தார்.

உடனே அக்கம்பக்கத்தினர் செல்வி, அவருடைய 3 மகன்களை மீட்டு சிகிச்சைக்காக நிலக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கதிரேசனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

ரவிக்குமார், குமரேசன் ஆகிய 2 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் மேல்சிகிச்சைக்காக செல்வியை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து நிலக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story