மாவட்டத்தில் காலியாக உள்ள 153 அங்கன்வாடி மைய பணியிடங்களுக்கு 2,500 பேர் விண்ணப்பம்


மாவட்டத்தில் காலியாக உள்ள 153 அங்கன்வாடி மைய பணியிடங்களுக்கு 2,500 பேர் விண்ணப்பம்
x
தினத்தந்தி 11 Feb 2019 10:45 PM GMT (Updated: 11 Feb 2019 9:47 PM GMT)

திருச்சி மாவட்டத்தில் காலியாக உள்ள 153 அங்கன்வாடி மைய பணியிடங்களுக்கு 2,500 பேர் விண்ணப்பித்துள்ளனர். முதுகலை பட்டதாரிகளும் வேலையில் சேர ஆர்வமாக விண்ணப்பம் செய்து உள்ளனர்.

திருச்சி,

திருச்சி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் 153 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலிபணியிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அங்கன்வாடி மைய பணியாளர் பணியிடத்துக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் என கல்வி தகுதி நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. உதவியாளர் பணிக்கு எழுத படிக்க தெரிந்திருந்தால் போதும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இதற்காக கடந்த மாதம் 23-ந்தேதியில் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

விண்ணப்பங்கள் அனுப்புவதற்கு நேற்று கடைசி நாள் ஆகும். இதனால் திருச்சி மாவட்ட பழைய கலெக்டர் அலுவலக அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் விண்ணப்பங்களை கொடுப்பதற்காக நேற்று ஏராளமான பெண்கள் நீண்ட வரிசையில் நின்றனர். அவர்களில் பலர் பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக திருச்சி மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரி புவனேஸ்வரி கூறுகையில் ‘153 பணியிடங்களுக்கு சுமார் 2,500 பேர் விண்ணப்பித்துள்ளனர். அங்கன்வாடி மைய பணியாளர் பணியிடத்துக்கு கல்வி தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்றாலும் பிளஸ்-2 படித்தவர்களும், பட்டதாரிகளும் அதிக அளவில் விண்ணப்பம் செய்து உள்ளனர். எம்.ஏ, எம்.சி.ஏ படித்த முதுகலை பட்டதாரிகளும் கூட ஆர்வமாக விண்ணப்பித்து உள்ளனர்’ என்றார்.

Next Story