பா.ம.க. பிரமுகர் படுகொலை: தடையை மீறி ஊர்வலம் சென்ற 7 பெண்கள் உள்பட 140 பேர் கைது


பா.ம.க. பிரமுகர் படுகொலை: தடையை மீறி ஊர்வலம் சென்ற 7 பெண்கள் உள்பட 140 பேர் கைது
x
தினத்தந்தி 12 Feb 2019 11:15 PM GMT (Updated: 12 Feb 2019 7:24 PM GMT)

பா.ம.க. பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து கும்பகோணம் பகுதியில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. மேலும் கண்டன ஊர்வலத்துக்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி ஊர்வலம் சென்ற 7 பெண்கள் உள்பட 140 பேரை போலீசார் கைது செய்தனர்.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் திருபுவனம் நகர பா.ம.க. முன்னாள் செயலாளர் ராமலிங்கம்(வயது 45). இவரை கடந்த 5-ந் தேதி இரவு ஒரு கும்பல் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது.

இந்த கொலை வழக்கு தொடர்பாக திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மதமாற்ற முயற்சியை தட்டிக்கேட்டதால் இந்த கொலை நடந்து இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் இதுவரை 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் கொலையாளிகள் பயன்படுத்திய காரும் பறி முதல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் மதமாற்றும் முயற்சியை ராமலிங்கம் தட்டிகேட்டதால் தான் இந்த கொலை நடந்ததாக கூறி பா.ஜனதா, இந்துமக்கள் கட்சி, சிவசேனா, விசுவ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது.

இந்த கடையடைப்பு போராட்டத்தை கைவிடக்கோரி நேற்று முன்தினம் கும்பகோணம் உதவி கலெக்டர் வீராச்சாமி தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதில் உடன்பாடு ஏற்படாததையடுத்து பா.ஜனதா உள்ளிட்ட இந்து அமைப்புகள் அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மேலும் அறிவித்தபடி போராட்டம் நடைபெறும் என கூறி போராட்ட குழுவினர் நேற்று முன்தினம் இரவு முதல் கும்பகோணத்தில் உள்ள அனைத்து வியாபார நிறுவனங்கள், கடைகளில் துண்டு பிரசுரம் வழங்கி ஆதரவு திரட்டினர்.

இதையொட்டி தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் தலைமையில் உதவி போலீஸ் சூப்பிரண்டுகள் பாலச்சந்திரன், அன்பழகன் மேற்பார்வையில், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் செங்கமலகண்ணன், கணேசமூர்த்தி, முருகேசன், ஜெயசீலன், மகேசன், நாகராஜ் மற்றும் 300-க்கும் மேற்பட்ட போலீசார், கும்பகோணம் காந்தி பூங்கா மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளில் குவிக்கப்பட்டனர்.

இதனால் கும்பகோணத்தில் பதற்றமான சூழல் நிலவியது. இந்த நிலையில் கடையடைப்புக்கு ஆதரவு தெரிவித்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன.

இந்த பதற்றத்திற்கிடையே ராமலிங்கம் கொலையை கண்டித்து நேற்று அனைத்து இந்து அமைப்புகள் சார்பில் பா.ஜனதா மாவட்ட தலைவர் ராஜா தலைமையில் கண்டன ஊர்வலம் நடந்தது. போராட்டக்குழுவினர், கும்பகோணம் மகாமக குளம் வீரசைவ மடத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு காந்தி பூங்காவை நோக்கி வந்தனர்.

ஊர்வலம் நாகேஸ்வரன் கோவில் வடக்கு வீதியில் வந்துகொண்டிருந்தபோது, அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து ஊர்வலத்தில் வந்தவர்கள் கும்பகோணம்-தஞ்சாவூர் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் பா.ம.க. நிர்வாகி பாலகுரு தலைமையில் காந்தி பூங்கா அருகே மறியல் செய்ய முயன்ற 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

கும்பகோணத்தில் நேற்று 2 இடங்களிலும் மொத்தம் 7 பெண்கள் உள்ளிட்ட 140 பேரை போலீசார் கைது செய்தனர். இந்து அமைப்புகள் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்ததை அடுத்து கும்பகோணம் பகுதியில் நேற்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. ஆனால் ஆட்டோக்கள், பஸ்கள் வழக்கம் போல் ஓடியது. பஸ்கள் இயங்கியபோதும் பயணிகள் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே காணப்பட்டது. அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நேற்று வழக்கம்போல் இயங்கின.

இதேபோல் ராமலிங்கத் தின் சொந்த ஊரான திருபுவனத்திலும் நேற்று கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. திருபுவனத்தில் உள்ள பட்டு கூட்டுறவு சங்கங்கள், பட்டு விற்பனை கடைகள் மற்றும் ஓட்டல்கள், டீக்கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. திருபுவனம் மற்றும் அதனை சுற்றி உள்ள ஊர்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இதேபோல் இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் நேற்று திருபுவனம் சென்று ராமலிங்கத்தின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அங்கிருந்து கும்பகோணத்துக்கு தனது ஆதரவாளர்களுடன் அவர் வந்து கொண்டு இருந்தார். அவரை வழியிலேயே போலீசார் வழிமறித்து கைது செய்தனர். அப்போது அவருடன் வந்த இந்து மக்கள் கட்சியினர் 20-க்கும் மேற்பட்டோர் ராமலிங்கம் படுகொலையை கண்டித்தும், போலீசாரை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதனால் கும்பகோணம்-மயிலாடு துறை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story