கரூரில் வீடு புகுந்து திருட முயன்ற அண்ணன்–தம்பி கைது


கரூரில் வீடு புகுந்து திருட முயன்ற அண்ணன்–தம்பி கைது
x
தினத்தந்தி 13 Feb 2019 11:00 PM GMT (Updated: 13 Feb 2019 4:43 PM GMT)

கரூரில் வீடு புகுந்து திருட முயன்ற அண்ணன்–தம்பியை போலீசார் கைது செய்தனர்.

கரூர்,

கரூர் தான்தோன்றிமலை கருப்பகவுண்டன்புதூரை சேர்ந்தவர் பழனிகுமார் (வயது 45). இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தார். இந்தநிலையில் அங்கு வந்த 2 பேர், திடீரென வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று திருட முயன்றனர்.

சத்தம் கேட்ட அப்பகுதி பொதுமக்கள் வந்து 2 பேரையும் பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் தான்தோன்றிமலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.


விசாரணையில், அவர்கள் தர்மபுரி மாவட்டம் வெண்ணாம்பட்டி இளங்கோ நகரை சேர்ந்த மொய்தீன் (30), அவரது தம்பி சாதிக்பாட்ஷா (27) என்பதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் 2 பேரும் சேலம் மாவட்டம், அழகாபுரம் போலீஸ் நிலைய நடவடிக்கையின்பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 6 மாதங்களுக்கு முன்பு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் வெளியே வந்துள்ளனர். அதன்பிறகு ஏற்கனவே கரூரில் கருப்பகவுண்டன்புதூர் ஆசிரியர் காலனியில் உள்ள ஒரு வீட்டில் நகை, பணத்தை திருடியதும் தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று மொய்தீன், சாதிக்பாட்ஷா ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களிடமிருந்து பணம், நகை பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story