திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி விழா திரளான பக்தர்கள் தரிசனம்


திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி விழா திரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 13 Feb 2019 10:30 PM GMT (Updated: 13 Feb 2019 6:37 PM GMT)

குடவாசல் அருகே உள்ள திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி விழா நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

குடவாசல்,

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள திருப்பாம்புரத்தில் வண்டுசேர்குழலி, சேஷபுரீஸ்வரர் கோவில் உள்ளது. ராகு-கேது தலமான இக்கோவிலில் ஆதிசேஷன், நாக வம்சத்திற்கு ஏற்பட்ட சாபத்தை போக்கிட சிவராத்திரி நாளன்று 3-ம் சாமத்தில் இறைவனை பூஜித்து சாப விமோசனம் அடைந்ததாக கூறப்படுகிறது.

அதேபோன்று ராகுவும், கேதுவும் சிவனை இதயத்தில் வைத்து ஏகசரீரமாக இருந்து வழிபட்டதால் இத்தலம் ராகு-கேது பரிகார தலமாக கருதப்படுகிறது.

இப்படி பல்வேறு சிறப்புகளை கொண்ட இத்தலத்தில் நேற்று மதியம் 2.02 மணிக்கு ராகு பகவான் கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கும், கேது பகவான் மகர ராசியில் இருந்து தனுசு ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைந்தனர். இதையொட்டி காலை 10 மணிக்கு சிறப்பு யாகசாலை பூஜை, விக்னேஸ்வர பூஜை, மகாலட்சுமி பூஜை நடந்தது.

மதியம் 1.30 மணியளவில் திரவியம், சந்தனம், தேன், பன்னீர், பஞ்சாமிர்தம், 1008 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது. இதனைதொடர்ந்து சரியாக 2.02 மணிக்கு தீபாராதனை காட்டப்பட்டது.

விழாவில் தஞ்சாவூர் இந்து சமய அறிநிலையத்துறை இணை ஆணையர் தென்னரசு, திருவாரூர் உதவி ஆணையர் கிருஷ்ணன், ஒன்றியக்குழு முன்னாள் துணைத்தலைவர் எஸ்.ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் டி.ராஜேந்திரன், நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு அருண் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அசோக்ராஜா, தக்கார் பரமானந்தம், மேலாளர் வள்ளிகந்தன் ஆகியோர் செய்து இருந்தனர். ராகு-கேது பெயர்ச்சியையொட்டி இன்று (வியாழக்கிழமை) ஏகதின லட்சார்ச்சனை நடக்கிறது.

Next Story