தோகைமலை அருகே காதல் திருமணம் செய்த ஆசிரியை கிணற்றில் தவறி விழுந்து பலி


தோகைமலை அருகே காதல் திருமணம் செய்த ஆசிரியை கிணற்றில் தவறி விழுந்து பலி
x
தினத்தந்தி 13 Feb 2019 10:15 PM GMT (Updated: 13 Feb 2019 8:32 PM GMT)

தோகைமலை அருகே காதல் திருமணம் செய்த ஆசிரியை கிணற்றில் தவறி விழுந்து பலியானார்.

தோகைமலை,

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே சோபனாபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் சரண்யா (வயது 23). இவர் துறையூரில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். அப்போது அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள ஆலத்தூர் பகுதியை சேர்ந்த கோபால கிருஷ்ணன் (25) என்பவரை காதலித்து, கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

சரண்யாவும், கோபாலகிருஷ்ணனும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் திருமணத்திற்கு பிறகு ஆலத்தூரில் உள்ள கோபாலகிருஷ்ணன் வீட்டில் 2 பேரும் குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று கோபாலகிருஷ்ணன் வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் சரண்யா இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சரண்யாவின் தந்தை ராஜேந்திரன், கோபாலகிருஷ்ணன் வீட்டின் அருகில் உள்ள கிணற்று மேட்டில் பாத்திரங்கள் கழுவும்போது தனது மகள் சரண்யா கிணற்றில் தவறி விழுந்து இறந்ததாக தோகைமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் தோகைமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

பின்னர் சரண்யாவின் உடலை கிணற்றில் இருந்து கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சரண்யாவிற்கு திருமணமாகி 6 மாதங்களே ஆவதால் குளித்தலை கோட்டாட்சியர் லியாகத் விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story