ராச்சாண்டார் திருமலை விரையாச்சல ஈஸ்வரர் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி விழா


ராச்சாண்டார் திருமலை விரையாச்சல ஈஸ்வரர் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி விழா
x
தினத்தந்தி 13 Feb 2019 10:30 PM GMT (Updated: 13 Feb 2019 8:43 PM GMT)

ராச்சாண்டார் திருமலையில் உள்ள விரையாச்சல ஈஸ்வரர் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தோகைமலை,

ராகு பகவான் கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கும், கேது பகவான் மகர ராசியிலிருந்து தனுசு ராசிக்கும் நேற்று இடம் பெயர்ந்தனர்.இதையொட்டி ராகு-கேது உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.கரூர் மாவட்டம், தோகைமலை அருகே ராச்சாண்டார் திருமலையில் விரையாச்சல ஈஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்பாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி விழா நேற்று நடந்தது.இதனையொட்டி கோவிலில் நவக்கிரகங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

பின்னர் ராகு பகவானுக்கு உளுந்து சாதமும், 16 வகையான பழங்களும், கேது பகவானுக்கு கொள்ளு சாதம் மற்றும் 12 வகையான பழங்களையும் கொண்டு கோவில் அர்ச்சகர் கந்தசுப்ரமணிய சிவாச்சாரியார் சிறப்பு அபிஷேகம் செய்தார்.தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் 12 ராசிகளை சேர்ந்தவர்கள் திரளாக கலந்துகொண்டு பரிகார பூஜைகளை செய்து ராகு-கேது பகவானை வழிபட்டனர். இதில் ராச்சாண்டார் திருமலை, வடசேரி, புழுதேரி, நெய்தலூர், பில்லூர், ஆர்ச்சம்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இதேபோல் லாலாபேட்டை கடைவீதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.இதனை தொடர்ந்து ராகு பகவான் மற்றும் கேது பகவானுக்கு பால், பழம், விபூதி உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து சுவாமிகளுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் அனைத்து ராசிக் காரர்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். 

Next Story