சிறையில் இறந்து விட்டால் உடலை தானம் செய்ய முருகன் கோரிக்கை முதல்-அமைச்சருக்கு கடிதம்


சிறையில் இறந்து விட்டால் உடலை தானம் செய்ய முருகன் கோரிக்கை முதல்-அமைச்சருக்கு கடிதம்
x
தினத்தந்தி 13 Feb 2019 10:15 PM GMT (Updated: 13 Feb 2019 9:00 PM GMT)

தொடர் உண்ணாவிரதத்தால் சிறையில் இறந்துவிட்டால் தனது உடலை அரசு மருத்துவமனைக்கு தானம் செய்ய வேண்டும் என்று ராஜீவ்காந்தி கொலைவழக்கு கைதி முருகன், முதல்-அமைச்சருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

வேலூர், 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையிலும் உள்ளனர். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்துவரும் 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக கவர்னர் முடிவு செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது. ஆனால் பலமாதங்களாகியும் அவர்கள் 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து கவர்னர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் தங்களை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வேலூர் ஆண்கள் சிறையில் உள்ள முருகன் கடந்த 2-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அதேபோன்று பெண்கள் சிறையில் இருக்கும் நளினியும் கடந்த 9-ந் தேதி முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார்கள். தொடர் உண்ணாவிரதம் காரணமாக இருவரின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அவர்கள் சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு நேற்று முருகனுக்கு 2 பாட்டில் குளுகோஸ், நளினிக்கு 2 பாட்டில் குளுகோஸ் ஏற்றப்பட்டதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் முருகனின் வழக்கறிஞர் புகழேந்தி நேற்று வேலூர் சிறையில் முருகன் மற்றும் நளினியை சந்தித்து பேசினார். பின்னர் அவர் கூறியதாவது:-

முருகன், நளினி ஆகிய இருவரும் விடுதலை செய்யக்கோரி தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் முருகன் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, சிறைகண்காணிப்பாளர் மூலம் ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் சிறையிலேயே தான் இறந்துவிட்டால், தனது உடலை அரசு மருத்துவமனைக்கு தானம் செய்ய முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story