நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளையும் கைப்பற்றும் மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் அப்சரா பேட்டி


நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளையும் கைப்பற்றும் மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் அப்சரா பேட்டி
x
தினத்தந்தி 13 Feb 2019 10:45 PM GMT (Updated: 13 Feb 2019 9:57 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளையும் கைப்பற்றும் என்று மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் அப்சரா கூறினார்.

காரைக்கால்,

அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் அப்சரா காரைக்கால் மாவட்டத்திற்கு வருகை தந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் கட்சி மேலிடம் உத்தரவிற்கு இணங்க, தமிழகம்- புதுவையில் தீவிர பிரசாரம் மேற்கொள்ள உள்ளேன். அதற்கான வேலைகள் தொடங்கிவிட்டது. பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் ஊழல் கட்சிகளாக மாறிவிட்டன. இந்த ஊழல் கட்சிகளை மக்கள் ஏற்க மாட்டார்கள். காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணியைதான் மக்கள் விரும்புகின்றனர். அதனால், இந்த கூட்டணியை தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் நிச்சயம் கைப்பற்றும்.

காங்கிரஸ் கட்சியை குற்றம்சாட்டும் பிரதமர், தான் ஆட்சிக்கு வந்தது முதல் அறிவியல் பூர்வமான ஊழல் செய்து மக்களை ஏமாற்றி வருகிறார். பெண்களை வலிமை மிக்கவர்களாக உருவாக்கினால்தான் வளமான தேசம் உருவாகும். அதற்காக ராகுல்காந்தி பல்வேறு திட்டங்களை தீட்டி நடைமுறைபடுத்தி வருகிறார்.

பிரியங்கா காந்தியை விமர்சனம் செய்வதாக நினைத்து, நாட்டில் உள்ள பெண்களை சுப்பிரமணிசாமி விமர்சித்து வருகிறார். அவரை ஒரு பொருட்டாகவே யாரும் மதிப்பதில்லை. இதற்கெல்லாம் வருகிற தேர்தலில் பெண்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். புதுச்சேரி கவர்னர் கிரண்பெடிக்கு மக்கள் பிரச்சினைகள் மீது துளிக்கூட அக்கறை இல்லை. அவரை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story