ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் வலியுறுத்தல்


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 14 Feb 2019 10:45 PM GMT (Updated: 14 Feb 2019 6:55 PM GMT)

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் வலியுறுத்தி உள்ளது.

கோட்டூர்,

கோட்டூரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் கோட்டூர் ஒன்றிய மாநாடு நடந்தது. மாநாட்டிற்கு ஒன்றிய துணைத்தலைவர் நாகசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பழனி முன்னிலை வகித்தார். மாநாட்டு கொடியினை இளைஞர் பெருமன்ற மாநில தலைவர் முருகேசு ஏற்றி வைத்தார். இளைஞர் பெருமன்ற மாநிலக்குழு உறுப்பினர் துரைஅருள்ராஜன் கலந்து கொண்டு பேசினார்.

இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கோட்டூர் ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, ஒன்றிய துணைச்செயலாளர் செந்தில்நாதன், கூட்டுறவு சங்க தலைவர் சிவசண்முகம், விவசாய தொழிலாளர் மாவட்ட பொருளாளர் ஜெயராமன், முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் தங்கையன், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் உஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

கோட்டூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி விடுதி கட்டிடம் பழுதடைந்து, இடிந்துள்ளதால் மாணவர்கள் அனைவரும் பள்ளி வளாகத்தை விடுதிபோல் பயன்படுத்தி தங்கி வருகின்றனர். இதனால் மாணவர்கள் பெரும் சிரமத்தில் உள்ளார்கள். புதிய விடுதி கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து 4 ஆண்டுகளாகியும், இதுவரை கட்டுமான பணி தொடங்கப்படவில்லை. உடனடியாக விடுதி கட்டுமான பணியினை தொடங்க வேண்டும்.

வேளாண்மை உற்பத்தியில் திருவாரூர் மாவட்டம் முன்னிலை வகித்து வருகிறது. பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்கும், கிராமப்புற மாணவர்களின் வளர்ச்சிக்காகவும் கோட்டூரில் அரசு வேளாண்மை கல்லூரியை தொடங்கிட வேண்டும். ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அனைத்து துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் ஒன்றிய தலைவராக சாந்தகுமார், ஒன்றிய செயலாளராக நல்லசுகம், ஒன்றிய பொருளாளராக அருண், துணைத்தலைவர்களாக நாகசுப்பிரமணியன், காரல்மாக்ஸ், விஜயகுமார் உள்பட 41 பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்வு செய்யப்பட்டது.

Next Story