தலைமை ஆசிரியையை கத்தியால் குத்தி நகை பறிப்பு வகுப்பறைக்குள் புகுந்து மர்ம நபர்கள் துணிகரம்


தலைமை ஆசிரியையை கத்தியால் குத்தி நகை பறிப்பு வகுப்பறைக்குள் புகுந்து மர்ம நபர்கள் துணிகரம்
x
தினத்தந்தி 14 Feb 2019 11:15 PM GMT (Updated: 14 Feb 2019 8:42 PM GMT)

தேன்கனிக்கோட்டை அருகே பட்டப்பகலில் வகுப்பறைக்குள் புகுந்து தலைமை ஆசிரியையை கத்தியால் குத்தி மர்ம நபர்கள் நகையை பறித்து சென்றனர்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் ரங்கநாத ரெட்டி. இவருடைய மனைவி கஜலட்சுமி(வயது 43). இவர் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள நாகசந்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்த பள்ளியில் 15 மாணவ, மாணவிகள் மட்டுமே படித்து வருகின்றனர். அனைவருக்கும் கஜலட்சுமி மட்டுமே பாடம் நடத்தி வருகிறார்.

இந்தநிலையில் நேற்று கஜலட்சுமி வழக்கம் போல பள்ளிக்கு சென்றார். அங்கு மதியம் 2.30 மணியளவில் அவர் மாணவர்களுக்கு பாடம் நடத்தி கொண்டிருந்தார். அப்போது முகமூடி அணிந்தபடி மர்ம நபர்கள் 2 பேர் திடீரென அந்த வகுப்பறைக்குள் புகுந்தனர். வந்த வேகத்தில் அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி அனைவரையும் மிரட்டினர்.

இதனால் கஜலட்சுமியும், மாணவ, மாணவிகளும் செய்வதறியாது திகைத்து அச்சத்தில் உறைந்து நின்றனர். பின்னர் மர்ம நபர்கள் கஜலட்சுமியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியையும், அவர் வைத்திருந்த ரூ.13 ஆயிரம் மதிப்புள்ள செல்போனையும், ரூ.3 ஆயிரத்து 500-யும் பறித்தனர். இதை தடுக்க முயன்ற அவரின் கையில் மர்ம நபர்கள் கத்தியால் குத்தினர். வலியால் அலறி துடித்த அவரும், இதைப் பார்த்த மாணவ, மாணவிகளும் கூச்சலிட்டனர்.

இந்த சத்தம் கேட்டு பள்ளியில் வேலை செய்து கொண்டிருந்த தளியை சேர்ந்த பெயிண்டர் ஆஞ்சியப்பா என்பவர் அங்கு விரைந்து ஓடி சென்றார். அப்போது வகுப்பறைக்குள் முகமூடி அணிந்த நபர்கள் நிற்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர்களை பிடிக்க முயன்றார். அப்போது ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் ஆஞ்சியப்பாவையும் கத்தியால் குத்தினர். மேலும் கட்டையால் தலையில் தாக்கினர். இதில் நிலைகுலைந்த அவர் கீழே விழுந்தார்.

இதனால் மாணவ, மாணவிகள் பயத்தில் கூச்சலிட்டு அழுதனர். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்களும் ஏதோ அசம்பாவிதம் நடப்பதை உணர்ந்து பள்ளிக்கு ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதையடுத்து காயம் அடைந்த தலைமை ஆசிரியை கஜலட்சுமியையும், ஆஞ்சியப்பாவையும் பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவ, மாணவிகளிடமும், பொதுமக்களிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

இதே போல கர்நாடக மாநிலம் ஆனேக்கல்லை சேர்ந்த லட்சுமி நாராயணன் என்பவர் மோட்டார்சைக்கிளில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். தளி அருகே உள்ள கும்ளாபுரம் பகுதியில் சென்றபோது மோட்டார்சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள், அவரை வழிமறித்து கத்தியால் குத்தி ரூ.15 ஆயிரத்தை பறித்து சென்றனர். அவரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த 2 சம்பவங்களிலும் அதே நபர்கள் தான் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் பள்ளி வகுப்பறைக்குள் புகுந்து தலைமை ஆசிரியையை கத்தியால் குத்தி பணம், நகை, செல்போனை மர்ம நபர்கள் பறித்து சென்ற இந்த துணிகர சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Next Story