வெண்ணந்தூரில் மனுநீதி நாள் முகாம்: 106 பயனாளிகளுக்கு ரூ.30 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்


வெண்ணந்தூரில் மனுநீதி நாள் முகாம்: 106 பயனாளிகளுக்கு ரூ.30 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 14 Feb 2019 11:00 PM GMT (Updated: 14 Feb 2019 9:14 PM GMT)

வெண்ணந்தூரில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 106 பயனாளிகளுக்கு ரூ.30½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்.

வெண்ணந்தூர்,

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரில் மாவட்ட கலெக்டரின் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

முகாமில் வருவாய்த்துறையின் சார்பில் 46 பயனாளிகளுக்கு ரூ.22.08 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்களையும், 30 பயனாளிகளுக்கு ரூ.3.60 லட்சம் மதிப்பிலான முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையினையும், வேளாண்மை துறையின் சார்பில் 11 பயனாளிகளுக்கு ரூ.28 ஆயிரத்து 971 மதிப்பிலான வேளாண் இடுபொருட்களையும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.27 ஆயிரம் மதிப்பிலான வேளாண் இடுபொருட்களையும், மகளிர் திட்டத்தின் சார்பில் 13 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.75 ஆயிரம் கடனுதவிகளையும் என மொத்தம் 106 பயனாளிகளுக்கு ரூ.30 லட்சத்து 49 ஆயிரத்து 971 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் அவற்றை உரிய அலுவலரிடம் வழங்கி அந்த மனுக்கள் மீது துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தேவிகாராணி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சாந்தி, வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் ஜெகதீசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் பொன்னுவேல், ராசிபுரம் வருவாய் தாசில்தார் ஷாகுல்ஹமிது, வெண்ணந்தூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் செல்வம் உட்பட அரசுத்துறை அலுவலர்கள், பயனாளிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story