வங்கி பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை: மேலாளர் உள்பட 11 பேர் மீது வழக்கு


வங்கி பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை: மேலாளர் உள்பட 11 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 14 Feb 2019 10:30 PM GMT (Updated: 14 Feb 2019 10:11 PM GMT)

வங்கி பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மேலாளர் உள்பட 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பெங்களூரு, 

வங்கி பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மேலாளர் உள்பட 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பாலியல் தொல்லை

பெங்களூரு கோரமங்களா பகுதியில் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் 32 வயது மதிக்கத்தக்க பெண் வர்த்தக வளர்ச்சி அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் பெண் அதிகாரிக்கு, வங்கி மேலாளர் மற்றும் அந்த வங்கியில் பணியாற்றும் 10 பேர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. அதாவது அவரை பாலியல் ரீதியாகவும், ஆபாசமாக பேசியும் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த பெண் அதிகாரி வங்கியின் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உள்ளார். ஆனால் உயர் அதிகாரிகள், ேமலாளர் மற்றும் ஊழியர்கள் 10 பேர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

11 பேர் மீது வழக்கு

இதையடுத்து மேலாளர் உள்பட 11 பேர் மீது அந்த பெண் அதிகாரி, கோரமங்களா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் மேலாளர் உள்பட 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கிடையே அந்த பெண் அதிகாரி தேசிய மகளிர் ஆணையத்திற்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் நான் பணியாற்றி வரும் வங்கியில் மேலாளர் மற்றும் என்னுடன் பணியாற்றி வரும் சக ஊழியர்கள் என்னை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தி வருகின்றனர். விடுமுறை நாட்களில் எனக்கு வேலை கொடுக்கின்றனர். அதிக நேரம் பணியில் இருக்க சொல்கிறார்கள். இதுபற்றி வங்கியின் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தேன். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. உயர்அதிகாரிகளிடம் புகார் தெரிவித்த என்னை பணியில் இருந்து நீக்குவதாக மேலாளர் உள்பட 11 பேர் மிரட்டுகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

Next Story