தற்கொலைக்கு முயன்ற நண்பரை காப்பாற்ற சென்ற தொழிலாளி ரெயிலில் அடிபட்டு சாவு


தற்கொலைக்கு முயன்ற நண்பரை காப்பாற்ற சென்ற தொழிலாளி ரெயிலில் அடிபட்டு சாவு
x
தினத்தந்தி 15 Feb 2019 10:15 PM GMT (Updated: 15 Feb 2019 8:17 PM GMT)

தற்கொலைக்கு முயன்ற நண்பரை காப்பாற்ற சென்ற வாலிபர் ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார்.

பொன்னேரி, 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தேவமா நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 20). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் நள்ளிரவில் அவரது செல்போனுக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதில் தான் மிகுந்த மனவேதனையில் இருப்பதாகவும், வாழ்க்கையே வெறுத்து விட்டதாகவும், அதனால் ரெயில் முன்பு விழுந்து தற்கொலை செய்துகொள்ள இருப்பதாகவும் எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என தாயுமான்செட்டி தெருவை சேர்ந்த அவரது நண்பர் அரவிந்த் பதிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து நண்பரை காப்பாற்ற வெங்கடேஷ் ஆரணி ஆற்றின் வழியாக செல்லும் தண்டவாளத்திற்கு சென்றார். ரெயில்வே பாலத்தில் நின்று கொண்டிருந்த அரவிந்த் ரெயில் வருவதை கண்டு கீழே குதித்தார். இந்த நிலையில் தண்டவாளத்தில் கால் சிக்கி அங்கிருந்து நகர முடியாமல் தவித்த வெங்கடேஷ் ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக பலியானார். தகவலறிந்த பொன்னேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வெஙகடேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது அருகில் அலறல் சத்தம் கேட்க அங்கு சென்று பார்த்தபோது பாலத்தில் இருந்து குதித்த அரவிந்த் பாறை மீது விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். போலீசார் அவரை மீட்டு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story