2 சிறுமிகளை தாக்கி பாலியல் பலாத்காரம் சித்தப்பா கைது


2 சிறுமிகளை தாக்கி பாலியல் பலாத்காரம் சித்தப்பா கைது
x
தினத்தந்தி 15 Feb 2019 10:00 PM GMT (Updated: 15 Feb 2019 9:17 PM GMT)

2 சிறுமிகளை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்த சித்தப்பாவை போலீசார் கைது செய்தனர்.

வேலூர்,

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வேலூர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறாள். இவளது தங்கை 2-ம் வகுப்பு படித்து வருகிறாள். இவர்களது தந்தை கடந்த 8 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். அதன்பின் இவர்களது தாயார் ஒரு கடையில் வேலை செய்து வருகிறார்.

சிறுமிகள் இருவரும் காலையில் பள்ளிக்கு சென்று விட்டு பின்னர் வீட்டின் அருகில் உள்ள டியூசனுக்கு செல்வது வழக்கம். நேற்று முன்தினம் இருவரும் வழக்கம்போல பள்ளிக்கு சென்று விட்டு பின்னர் டியூசனுக்கு சென்றனர். மாலை 7 மணி அளவில் டியூசனுக்கு சென்ற 2 சிறுமிகளையும் அந்த பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுரேஷ்பாபு (வயது 30) என்பவர் வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு இருவரையும் அவர் தாக்கி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் அவர்களை மிரட்டி உள்ளார். வேலை முடிந்து வீட்டுக்கு வந்த சிறுமிகளின் தாயார், பிள்ளைகளின் நடவடிக்கைகளில் மாற்றம் உள்ளதை கவனித்தார்.

அவர் இது குறித்து விசாரித்தபோது, சுரேஷ்பாபு பாலியல் பலாத்காரம் செய்தது அவருக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மைதிலி, சுரேஷ்பாபு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார். கைதான சுரேஷ்பாபு சிறுமிகளுக்கு சித்தப்பா உறவு முறையுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story