தபால் ஊழியர் தற்கொலை: “என்னுடைய கணவர் சாவுக்கு கந்துவட்டி கும்பல் தான் காரணம்” மனைவி கண்ணீர் பேட்டி


தபால் ஊழியர் தற்கொலை: “என்னுடைய கணவர் சாவுக்கு கந்துவட்டி கும்பல் தான் காரணம்” மனைவி கண்ணீர் பேட்டி
x
தினத்தந்தி 16 Feb 2019 11:00 PM GMT (Updated: 16 Feb 2019 3:11 PM GMT)

“என்னுடைய கணவர் சாவுக்கு கந்துவட்டி கும்பல் தான் காரணம்” என்று தபால் ஊழியர் தற்கொலை விவகாரத்தில் அவருடைய மனைவி கண்ணீர் பேட்டி அளித்துள்ளார்.

மேலகிருஷ்ணன்புதூர்,

நாகர்கோவில் அருகே தெங்கம்புதூர் பணிக்கன்குடியிருப்பை சேர்ந்தவர் சுந்தரமாணிக்கம் (வயது 60), தபால் ஊழியர். இவருடைய மனைவி நேசவடிவு. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். முதல் மகள் திருமணத்திற்காகவும், வீடு கட்டியதற்காகவும் சுந்தரமாணிக்கம் கடன் வாங்கியுள்ளார். கடன் கொடுத்தவர்கள், கந்து வட்டி கேட்டு வசூலித்து வந்துள்ளனர். வாங்கிய கடனுக்கு மேல் அவர் வட்டி கட்டி விட்டார். ஆனால் கடந்த 4 மாதங்களாக அவரால் வட்டி கட்ட முடியவில்லை.

இதனால் கந்து வட்டி கும்பல் அவரையும், அவருடைய குடும்பத்தினரையும் தகாத வார்த்தையால் பேசி தினமும் தொந்தரவு கொடுத்தனர். இதனால் மனமுடைந்த அவர் முதல்–அமைச்சருக்கு உருக்கமான கடிதம் எழுதி விட்டு உடையப்பன் குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு முந்திரி தோட்டத்தில் தற்கொலை செய்து கொண்டார். 14–ந் தேதி அவருடைய உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.

கந்து வட்டி கொடுமையால் தபால் ஊழியர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதுதொடர்பாக சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே சுந்தரமாணிக்கத்திடம் கந்து வட்டி வாங்கிய கும்பல் தலைமறைவாகி விட்டனர். போலீசார் அவர்களுடைய செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது. அனைத்தும் ‘சுவிட்ச் ஆப்‘ செய்யப்பட்டிருந்தது. தலைமறைவான கந்துவட்டி கும்பலை பிடிக்க தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே சுந்தரமாணிக்கம் மனைவி நேசவடிவு கண்ணீருடன் கூறுகையில், என்னுடைய கணவர் தான் உருக்கமான கடிதத்தை எழுதியுள்ளார். அதில் அவருடைய கையெழுத்து தான் உள்ளது. மாதந்தோறும் வட்டி மட்டுமே ரூ.75 ஆயிரத்துக்கு மேல் கணவர் கட்டி வந்தார். அசலுக்கு மேல் வட்டி கட்டியாச்சு, ஆனால் கடனை அடைக்க முடியவில்லை. இந்தநிலையில் சில மாதங்களாக வட்டி கட்ட எனது கணவர் சிரமப்பட்டார்.

இதனால் கந்து வட்டி கும்பல் நெருக்கடி கொடுத்தனர். தகாத வார்த்தைகளால் எனது கணவரையும், எங்களையும் திட்டினர். அதிலும், எங்கள் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண் காலையிலேயே வீட்டுக்கு வந்து அவரிடம் பணம் கேட்டு தினம், தினம் தொந்தரவு செய்தார். அவர் முன்னாடியே வயதுக்கு வந்த மகள்களையும் தகாத வார்த்தைகளால் பேசினார்.

இதனால் அவர் விரக்தி அடைந்தார். அந்த விரக்தியில் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார். என்னுடைய கணவர் தற்கொலைக்கு கந்துவட்டி கும்பல் தான் காரணம். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Next Story