கும்மிடிப்பூண்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு 2 வீடுகளில் திருட முயற்சி


கும்மிடிப்பூண்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு 2 வீடுகளில் திருட முயற்சி
x
தினத்தந்தி 16 Feb 2019 11:00 PM GMT (Updated: 16 Feb 2019 7:30 PM GMT)

கும்மிடிப்பூண்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் ரொக்கப்பணத்தை திருடிய 2 மர்ம நபர்களை அங்கு பதிவாகி உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு போலீசார் தேடிவருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி, 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ம.பொ.சி.நகரை சேர்ந்தவர் பரமேஸ்வரி (வயது 68). இவருக்கு சொந்தமான குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு பரமேஸ்வரியை தவிர மேலும் 12 பேர் வாடகைக்கு வசித்து வருகின்றனர்.

நேற்று அதிகாலை மேற்கண்ட குடியிருப்பு வளாகத்திற்கு வெளியே கோலம் போடுவதற்காக மீனாட்சி (வயது 55) என்ற பெண் அங்கு வந்தார். அப்போது அந்த குடியிருப்பு வளாகத்தில் இருந்த வீடுகள் வெளிபுறமாக பூட்டப்பட்டு இருப்பதையும், 3 வீடுகளின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதையும் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் வீட்டின் உரிமையாளர் பரமேஸ்வரியின் வீட்டின் வெளிப்புற தாழ்ப்பாளை மீனாட்சி முதலில் திறந்தார். பின்னர் தான் அங்கு உள்ள அனைவருக்கும் அந்த வளாகத்தில் திருட்டு நடந்திருப்பது தெரியவந்தது.

தகவலறிந்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். போலீசார் அங்கு இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணிக்கு மர்ம நபர்கள் இந்த குடியிருப்பு வளாகத்திற்குள் சுற்றுச்சுவர் ஏறி குதித்து உள்ளே புகுவதும், அங்குள்ள வீடுகளை நோட்டமிடுவதும், வீட்டின் கீழ்தளம் மற்றும் மேல்தளத்தில் உள்ள வீடுகளை அவர்கள் வெளிப்புறமாக தாழ்ப்பாள் போட்டு பூட்டுவதும் வீடுகளின் பூட்டுகளை உடைப்பதும் பதிவாகி இருந்தது.

ராஜா (35), கோவிந்தன்(55) ஆகியோரது வீடுகளின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. ஆனால் அங்கு இருந்த பொருட்கள் எதுவும் திருட்டு போகவில்லை. கீழ்தளத்தில் உள்ள ஸ்ரீகாந்த் (வயது 38) என்ற தனியார் தொழிற்சாலை ஊழியரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு அங்கு இருந்த 4 பவுன் தங்கநகைகள், ரூ.24 ஆயிரம் மற்றும் விலை உயர்ந்த துணிகள் திருடப்பட்டிருந்தது.

கும்மிடிப்பூண்டி ரெயில்நிலைய பாதுகாப்புபடை போலீஸ் நிலையம் பின்புறம் ஆள்நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த இந்த துணிகர திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 2 மர்ம நபர்களின் அடையாளம் அந்த குடியிருப்பு வளாகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் தெளிவாக பதிவாகி உள்ளது.

28 வயதிற்குட்பட்ட 2 மர்ம நபர்களும், நள்ளிரவு 12.40 மணிக்கு வீட்டுக்குள் நுழைந்து 1.05 மணிக்கு வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். 25 நிமிடங்கள் பொறுமையாக இந்த துணிகர திருட்டில் அவர்கள் ஈடுபட்டிருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீபன்ராஜ் வழக்குப்பதிவு செய்து மேற்கண்ட கண்காணிப்பு கேமராக்களின் பதிவு காட்சிகளின் அடிப்படையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 2 மர்ம நபர்களையும் தேடிவருகின்றனர். மர்ம நபர்களின் முகதோற்றம் தெளிவாக அடையாளம் காணப்பட்ட நிலையில் அவர்களை பிடிக்கவும், மேலும் வேறு ஏதாவது திருட்டு சம்பவங்களில் இவர்களது கைவரிசை உள்ளதா? என்பதனை கண்டறியவும் 2 போலீஸ் தனிபடைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

Next Story