மாவட்டத்தை கலக்கிய ஜெனரேட்டர் திருடர்கள் கைது


மாவட்டத்தை கலக்கிய ஜெனரேட்டர் திருடர்கள் கைது
x
தினத்தந்தி 16 Feb 2019 9:52 PM GMT (Updated: 16 Feb 2019 9:52 PM GMT)

மாவட்டத்தை கலக்கிய ஜெனரேட்டர் திருடர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேவகோட்டை,

மாவட்டத்தில் மைக்செட் நடத்தி வருபவர்களிடமும், திருமண மண்டபங்களிலும் ஏராளமான ஜெனரேட்டர்கள் மற்றும் ஸ்பீக்கர்கள், விலையுயர்ந்த விளக்குகள் ஆகியவை தொடர்ந்து திருடு போய்வருவதாக பல்வேறு போலீஸ்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்தநிலையில் தேவகோட்டை ராம்நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டர், ஸ்பீக்கர்கள், விலையுயர்ந்த விளக்குகள் ஆகியவற்றை யாரோ மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்து தேவகோட்டை நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து திருமண மண்டபத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவின் பதிவுகளை கொண்டு போலீசார் விசாரித்தனர். அதில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர்.

இதையடுத்து போலீசார் திருப்பத்தூர் தாலுகா ஆத்திரான்பட்டி என்ற ஊரில் மைக்செட் வைத்துள்ள சேவகன் என்ற செல்வம் (வயது 26), அதே ஊரைச் சேர்ந்த வீரன் (32) ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் கண்ணங்குடி, தேவகோட்டை, புதுக்கோட்டை மாவட்டம் நமுனை சமுத்திரம், நெற்குப்பை, கீழச்சிவல்பட்டி உள்பட பல பகுதிகளில் ஜெனரேட்டர் உள்ளிட்ட பொருட்களை திருடியது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து மாவட்டத்தை கலக்கிய ஜெனரேட்டர் திருடர்கள் 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 8 ஜெனரேட்டர்கள், தலா 10 ஸ்பீக்கர், விலையுயர்ந்த விளக்குகளை கைப்பற்றினர்.


Next Story