ராணுவ வீரர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உளுந்தூர்பேட்டையில், மவுன ஊர்வலம்


ராணுவ வீரர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உளுந்தூர்பேட்டையில், மவுன ஊர்வலம்
x
தினத்தந்தி 16 Feb 2019 10:15 PM GMT (Updated: 16 Feb 2019 10:10 PM GMT)

பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உளுந்தூர்பேட்டையில் மவுன ஊர்வலம் நடந்தது.

உளுந்தூர்பேட்டை, 

காஷ்மீர் மாநிலம் புல்வாரா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் பலியானார்கள். இது நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பலியான ராணுவ வீரர்களுக்கு நாடு முழுவதும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

அதன்படி, விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசியல் கட்சியினர், வர்த்தகர்கள் என சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒன்றுதிரண்டு மவுன ஊர்வலமாக புறப்பட்டு உளுந்தூர்பேட்டையில் உள்ள சுதந்திர தின மணிக்கூண்டு திடலை வந்தடைந்தனர்.

இதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் சாகுல்அமீது மற்றும் போலீசார் மணிக்கூண்டு திடலில் வைக்கப்பட்டிருந்த ராணுவ வீரர்களின் பதாகைக்கு மலர் வளையம் வைத்து வீரவணக் கம் செலுத்தினர். பின்னர் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. போலீசாரை தொடர்ந்து மாணவ-மாணவிகளும், அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களும் ராணுவ வீரர்களின் பதாகைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Next Story