அரியலூர்– பெரம்பலூர் மாவட்டங்களில் ரூ.2 ஆயிரம் வழங்க தொழிலாளர்கள் கணக்கெடுப்பு பணி அதிகாரிகள் ஆய்வு


அரியலூர்– பெரம்பலூர் மாவட்டங்களில் ரூ.2 ஆயிரம் வழங்க தொழிலாளர்கள் கணக்கெடுப்பு பணி அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 17 Feb 2019 11:00 PM GMT (Updated: 17 Feb 2019 5:38 PM GMT)

அரியலூர்–பெரம்பலூர் மாவட்டங்களில் ரூ.2 ஆயிரம் வழங்க நடைபெற்று வரும் ஏழை தொழிலாளர்கள் கணக்கெடுக்கும் பணியினை அந்தந்த அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பெரம்பலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேசிய தகவலியல் மையம் மற்றும் அரியலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சிறு, குறு விவசாயிகள் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை தொழிலாளர்கள் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. இதனை நேற்று சமூக நலத்துறை இயக்குனரும், இந்த திட்டத்திற்கான மாவட்ட கண்காணிப்பு அதிகாரியுமான அமுதவள்ளி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி உடனிருந்தார். அப்போது அமுதவள்ளி கூறியதாவது:–

மத்திய அரசின் பிரதம மந்திரி கிஸ்ஸான் சம்மான் நிதித்திட்ட பயனாளிகள் மற்றும் மாநில அரசின் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க கணக்கெடுத்தல் பணிகள், அரியலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்று வருகிறது. அரியலூர் மாவட்டத்தில் திட்டப்பணிகளுக்காக 520 கணக்கெடுப்பு பணியாளர்களும், 131 கணினி பணியாளர்களும் 12 மையங்களில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. விண்ணப்பப் படிவங்களை பணியாளர்கள் விவசாயிகளிடமிருந்து விரைவாக பெற்று பதிவேற்றம் செய்ய வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


இதையடுத்து கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் நடந்த சிறு, குறு விவசாயிகள் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை தொழிலாளர் கணக்கெடுக்கும் பணிகள் குறித்து அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டத்தில் சமூக நலத்துறை இயக்குனர் அமுதவள்ளி கலந்து கொண்டார். இதில் திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி திட்டம்) சுந்தர்ராஜன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிதாபானு, திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) லலிதா, கோட்டாட்சியர்கள் சத்தியநாராயணன் (அரியலூர்), ஜோதி (உடையார்பாளையம்), தேசிய தகவலியல் அதிகாரி ஜான் பிரிட்டோ, அரியலூர் நகராட்சி ஆணையர் திருநாவுகரசு, தாசில்தார்கள் கதிரவன் (அரியலூர்), குமரைய்யா (ஜெயங்கொண்டம்) மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் ஏழைத்தொழிலாளர்கள் கணக்கெடுக்கும் பணி தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் நடந்து வருகிறது. அதில் 257 கணக்கெடுக்கும் பணியாளர்கள் வழங்கிய விவரங்களை 193 கணினி பணியாளர்கள் கணினியில் பதிவேற்றும் பணிகளை கலெக்டர் சாந்தா முன்னிலையில் காதி மற்றும் கிராமத்தொழில் வாரிய முதன்மை நிர்வாக அதிகாரி நடராஜன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து பெரம்பலூர் தாலுகா எசனை கிராம பொதுமையத்திற்கு நடராஜன் சென்று அங்கு மேற்கொள்ளப்படும் பணிகளையும், பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெறும் இப்பணி குறித்த ஆய்வை மேற்கொண்டு, அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, மாவட்ட மகளிர் திட்ட அதிகாரி தேவநாதன், வேளாண் இணை இயக்குனர் இளவரசன், கோட்டாட்சியர் விசுவநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) ராஜராஜன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story