எந்த கட்சியை கண்டும் அ.தி.மு.க. பயப்படாது: பா.ஜனதாவுக்கு அரசியல் வாழ்வு தேவைப்படுகிறது கே.பி.முனுசாமி பேட்டி


எந்த கட்சியை கண்டும் அ.தி.மு.க. பயப்படாது: பா.ஜனதாவுக்கு அரசியல் வாழ்வு தேவைப்படுகிறது கே.பி.முனுசாமி பேட்டி
x
தினத்தந்தி 17 Feb 2019 11:00 PM GMT (Updated: 17 Feb 2019 6:50 PM GMT)

எந்த கட்சியை கண்டும் அ.தி.மு.க. பயப்படாது. பா.ஜனதாவுக்கு தான் அரசியல் வாழ்வு தேவைப்படுகிறது என தஞ்சையில் கே.பி.முனுசாமி கூறினார்.

தஞ்சாவூர்,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் தமிழகத்தில் திருமண நிகழ்ச்சியை துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தொடங்கி வைத்து இருக்கிறார். தமிழகம் முழுவதும் ஜெயலலிதா பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. தமிழர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ? அங்கெல்லாம் பிறந்தநாள் விழா நடைபெறும்.

ரஜினிகாந்த் முதலில் மக்களை வந்து சந்திக்கட்டும். ஊடகங்களுக்கு தான் பேட்டி கொடுத்து கொண்டு இருக்கிறார்.

அ.தி.மு.க. யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது ரகசியமாக இருக்கிறது. முறைப்படி ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் நிர்வாகிகளுடன் ஆலோசித்த பின்னர் கூட்டணி குறித்து அறிவிப்பார்கள். அ.தி.மு.க.வை பா.ஜ.க. பணிய வைக்கிறது என்ற கேள்விக்கு ஏற்கனவே நான் விளக்கம் கொடுத்து இருக்கிறேன். பா.ஜ.க. என்ற இயக்கத்தை தமிழகத்தில் அடையாளம் காட்டியது ஜெயலலிதா தான்.

1998-ம் ஆண்டு பா.ஜனதாவுடன் எந்த கட்சியும் கூட்டணி வைக்க முன்வரவில்லை. ஜெயலலிதா தான் பா.ஜனதாவையும், பா.ம.க.வையும் அழைத்து கூட்டணி அமைத்து தனது செல்வாக்கினால் மிகப்பெரிய வெற்றியை தேடி கொடுத்தார். முதன்முறையாக பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் கட்சிக்கு மாற்று இயக்கமாக பா.ஜனதாவை ஆட்சியில் அமர்த்தியவர் ஜெயலலிதா.

இப்படிப்பட்ட வரலாறு கொண்ட அ.தி.மு.க. எந்த கட்சியை கண்டும் பயப்படாது. எங்களது எதிரிகள் வேண்டுமானால் அ.தி.மு.க.வை பா.ஜ.க. பணிய வைக்கிறது என்ற கருத்தை கூறலாம். ஆனால் ஜெயலலிதாவின் தொண்டர்களான எங்களது தலைவர்கள் யாரையும் கண்டு அஞ்சாது தக்க பதில்களை துணிவுடன் அளித்து வருகிறார்கள்.

பா.ஜனதாவுக்கு அரசியல் வாழ்வு தேவைப்படுகிறது. அதனால் அவர்கள் வரலாம். மு.க.ஸ்டாலின் முதலில் மக்களை அழைத்து வந்து கிராமசபை கூட்டத்தை நடத்தினார். துணை முதல்-அமைச்சராக இருந்தபோது எதுவும் செய்யாமல் இப்போது வந்து இருக்கிறீர்களே என மக்கள் கேள்வி கேட்டதால் அவர் ஆடி போய்விட்டார். இதனால் கட்சி தொண்டர்களை மட்டும் அழைத்து வரும்படி நிர்வாகிகளிடம் அவர் கூறியுள்ளார்.

இந்த ஆட்சி 5 ஆண்டுகளை சிறப்பாக நிறைவு செய்யும். பின்னர் வரும் தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story