கவர்னருக்கு எதிராக 5-வது நாளாக தர்ணா: முதல்-அமைச்சர், அமைச்சர்களின் வீடுகளில் கருப்பு கொடி மு.க.ஸ்டாலின், கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் நேரில் வாழ்த்து


கவர்னருக்கு எதிராக 5-வது நாளாக தர்ணா: முதல்-அமைச்சர், அமைச்சர்களின் வீடுகளில் கருப்பு கொடி மு.க.ஸ்டாலின், கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் நேரில் வாழ்த்து
x
தினத்தந்தி 17 Feb 2019 11:45 PM GMT (Updated: 17 Feb 2019 9:05 PM GMT)

கவர்னர் கிரண்பெடிக்கு எதிராக நேற்று 5-வது நாளாக தர்ணா போராட்டம் நடந்தது. இதையொட்டி முதல்-அமைச்சர், அமைச்சர்களின் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

புதுச்சேரி,

அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடுவதுடன் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தவிடாமல் முட்டுக்கட்டையாக இருக்கிறார், என்று கவர்னர் கிரண்பெடி மீது முதல்-அமைச்சர் நாராயணசாமி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இந்தநிலையில் மக்களுக்கு தேவையான 36 விதமான கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டும் என்று கவர்னருக்கு நாராயணசாமி கடிதம் எழுதினார்.

இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி கடந்த 13-ந் தேதி முதல் கவர்னர் கிரண்பெடியை கண்டித்து முதல் அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுடன் கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்.

நேற்று 5-வது நாளாக இந்த போராட்டம் நீடித்தது. இதில் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அவர்கள் பகல் இரவு என அங்கேயே இருந்து வருகின்றனர். தர்ணா போராட்டம் நடத்தி வரும் முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் தொலைபேசி மூலமும், நேரிலும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்க முதல்- மந்திரி மம்தா பானர்ஜி ஆகியோர் நாராயணசாமியை தொடர்பு கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

புதுச்சேரிக்கு நேற்று பிற் பகல் 3 மணி அளவில் தி.மு.க. தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வந்தார். தர்ணா போராட்டம் நடைபெறும் கவர்னர் மாளிகைக்கு அவர் வந்தார். மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான நமச்சிவாயம் வரவேற்று அழைத்து வந்தார். முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடிகிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன் மற்றும் எம்.எல்.ஏ.க்களை சந்தித்து சால்வை அணிவித்து அவர் வாழ்த்து தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் முத்தரசன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் நாராயண சாமியை நேரில் சந்தித்து தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.

கவர்னர் மாளிகை முன்பு முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் தொடர்ந்து தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று பகல் 1 மணியளவில் புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் ராமன், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் வாசுதேவன் தலைமையில் மருத்துவ குழுவினர் போராட்ட களத்திற்கு சென்றனர். அங்கு முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல். ஏ.க்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.

இந்தநிலையில் கண்டன ஆர்ப்பாட்டம், கருப்புகொடி ஏற்றுவது, உண்ணா விரதம் என அடுத்தடுத்து போராட்டங்களில் ஈடுபடுவது என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் கன்னியகோவில், அரியாங்குப்பம், திருபுவனை, திருக்கனூர், மண்ணாடிப்பட்டு, வில்லியனூர், நெட்டப்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

நேற்று காலை எல்லையம்மன் கோவில் தெருவில் உள்ள முதல் அமைச்சர் நாராயணசாமியின் வீட்டில் கருப்புகொடி ஏற்றி வைக்கப்பட்டது. அவரது வீடு இருக்கும் சாலையின் இருபுறமும் தொண்டர்கள் கருப்பு கொடி கட்டினர். காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சியின் மாநில தலைவர் நமச்சிவாயம் கருப்பு கொடி ஏற்றினார்.

லப்போர்த் வீதியில் உள்ள தி.மு.க. தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. கட்சி அலுவலகத்திலும், செஞ்சி சாலையில் உள்ள வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் அலுவலகத்திலும் கருப்பு கொடி ஏற்றினர். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வீடுகளிலும் கருப்புகொடி ஏற்றப்பட்டது.

நேருவீதி, காந்திவீதி, காமராஜர் வீதி உள்பட நகரில் பல்வேறு இடங்களிலும், அரியாங்குப்பம், திருக்கனூர் உள்பட பல ஊர்களின் முக்கிய சந்திப்புகளில் கருப்பு கொடி ஏற்றி கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளிலும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கருப்பு கொடி ஏற்றி கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

Next Story