கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி


கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 18 Feb 2019 11:00 PM GMT (Updated: 18 Feb 2019 3:51 PM GMT)

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் ரமேஷ் - சித்ரா தம்பதியினர். இவரது மகள் ஐஸ்வர்யா. இவர்கள் மூன்று பேரும் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு திடீரென ஐஸ்வர்யாவின் தாய் சித்ரா தனது உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து, அவரது உடல் மீது தண்ணீர் ஊற்றி அழைத்து சென்றனர்.

இது குறித்து ஐஸ்வர்யாவிடம் விசாரித்த போது கூறியதாவது:- எனக்கும், ஊத்தங்கரை தாலுகா நாகல்பட்டி கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் என்பவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ந் தேதி ஊர் பெரியோர்கள் முன்னிலையில், அங்குள்ள வேடியப்பன் கோவிலில் திருமணம் நடந்தது. பின்னர் 10 நாட்கள் கழித்து திருமணத்தை பதிவு செய்து கொள்ளலாம் என கூறி, என்னை எனது தாய் வீட்டில் விட்டு சென்றுவிட்டனர். இது நாள் வரையில் அவர்கள் என்னை அழைத்து செல்லவில்லை.

இந்த நிலையில் சில நாட்கள் கழித்து, எனது கணவர் கோவிந்தனுக்கு, 14 வயது சிறுமியை இரண்டாவது திருமணம் செய்து வைத்துள்ளது தெரியவந்தது. இது குறித்து நான் அப்போது பர்கூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். அதன் அடிப்படையில் போலீசார் எனது கணவரை அழைத்து விசாரணை நடத்தினார்கள். அப்போது 10 நாட்கள் கழித்து வந்து என்னை அழைத்து செல்வதாக கூறிஉறுதிமொழி அளித்துவிட்டு சென்றவர் அதன் பின் வரவில்லை.

இது குறித்து போலீசாரிடம் பலமுறை கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தான் எனது தாய் சித்ரா தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். எனவே 2-வது திருமணம் செய்த எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினைரை கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story