பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 18 Feb 2019 10:45 PM GMT (Updated: 18 Feb 2019 7:57 PM GMT)

நாகையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

4ஜி சேவையை பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு வழங்க வேண்டும். பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை தனியாரிடம் தாரைவார்க்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நேற்று முதல் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் ஒரு பகுதியாக நாகை பழைய பஸ் நிலையம் அருகே பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு கிளை தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். செயலாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தார். இதில் தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த ரகுமான், ராஜசேகர், சீனிவாசன், மதியழகன், விநாயகமூர்த்தி, விஜயஆரோக்கியராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

4ஜி சேவையை பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு வழங்க வேண்டும். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை தனியாரிடம் தாரைவார்க்கும் முயற்சியை கைவிட வேண்டும். ஓய்வூதியதார்களுக்கு ஓய்வூதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும். அரசு விதிகளின் படி மட்டுமே பி.எஸ்.என்.எல். நிறுவனத்திடம் இருந்து ஓய்வூதிய பங்களிப்பை பெற வேண்டும். பி.எஸ்.என்.எல்.-ன் மேலாண்மை கொள்கைக்கு விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டும். குறைந்த பட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். பிரதி மாதம் 7-ந் தேதிக்குள் சம்பளம் பட்டுவாடா செய்ய வேண்டும்.

சம்பள பாக்கியை உடனே வழங்க வேண்டும். 10 ஆண்டுகளாக பணி வேலை செய்பவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 2-வது ஊதிய மாற்றக்குழுவில் விடுபட்ட பரிந்துரைகளை அமலாக்க வேண்டும், 15 சதவீதம் ஊதிய நிர்ணய பலனுடன் 3-வது ஊதிய மாற்றத்தை அமலாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Next Story