அன்னவாசலில் ஜல்லிக்கட்டு காளைகள் முட்டியதில் 22 பேர் காயம்


அன்னவாசலில் ஜல்லிக்கட்டு காளைகள் முட்டியதில் 22 பேர் காயம்
x
தினத்தந்தி 18 Feb 2019 10:45 PM GMT (Updated: 18 Feb 2019 8:56 PM GMT)

அன்னவாசலில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 22 பேர் காயமடைந்தனர்.

அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் உள்ள தர்ம சமவர்த்தினி சமேத விருத்தபுரீஸ்வரர் கோவிலில் மாசி மக திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறும். இதையடுத்து இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. இதையொட்டி அன்னவாசல் இடத்தெரு அருகே உள்ள திடலில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. முதலில் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. ஜல்லிக்கட்டை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

இதில் 270 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. இதில் புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கரூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த 1,125 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

காளைகள் முட்டியதில் மதுரையை சேர்ந்த தீபக்குமார் (வயது 19), கொட்டாப்பட்டையை சேர்ந்த வைரணி (22), சூரியூரை சேர்ந்த சந்தோஷ் (20), பார்வையாளர்கள் அன்னவாசலை சேர்ந்த முருகன் (36), மழவராயன்பட்டியை சேர்ந்த தங்கராஜ் (25), முக்கண்ணாமலைப்பட்டியை சேர்ந்த கிருஷ்ணன் (22) உள்பட 22 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் படுகாயமடைந்த 5 பேர் மட்டும் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால், வெள்ளி நாணயம், தங்க மோதிரம், கட்டில், நாற்காலிகள், குடம், மின்விசிறி, குக்கர் போன்றவை பரிசு பொருட்களாக வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டை காண புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கரூர் மற்றும் அன்னவாசல் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு போட்டியை கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை விழாகுழுவினர் மற்றும் அன்னவாசல் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். ஜல்லிக்கட்டு காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது.

ஜல்லிக்கட்டையொட்டி புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையில், இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கோபாலசந்திரன், அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி உள்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story